நம்பர்-1 நடிகை யார்...? ஸ்பெஷல் ஸ்டோரி!!!

10th of April 2014
சென்னை::தமிழ் சினிமாவில் இப்போது நம்பர்-1 நடிகை யார்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. காரணம் கடந்த சில வருடங்களாகவே இந்த நம்பர்-1 என்கிற இடம் காலியாகத்தான் இருக்கிறது. ஒரு மெகா ஹிட் கொடுத்து விட்டு அந்த நாற்காலியில் அமர்வார்கள், பிறகு அடுத்த ஃபிளாபில் இறங்கி விடுவார்கள். இப்படி மியூசிக் சேர் விளையாட்டாக மாறிவிட்டது நம்பர்-1 நாற்காலி.
 
சினிமா தொடங்கிய காலத்தில், முதல் ஹீரோயின் டி.பி.ராஜலட்சுமி தான் நம்பர்-1. அடுத்து பானுமதி, பத்மினி, சரோஜாதேவி, ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி, ராதா என வரிசையாக பலர் நம்பர்-1 நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். பெரிய ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்து ஹிட் கொடுப்பது, எல்லோரையும் விட அதிக சம்பளம் வாங்குவது, பெயரை டைட்டில் கார்டில் பார்த்ததுமே கைதட்டல் வாங்குவது, இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கால்ஷீட்டுக்காக காத்திருப்பது இதுதான் நம்பர்-1 நாற்காலியில் அமர்ந்திருப்பதற்கான தகுதியாக சினிமா வரையறுத்து வைத்திருக்கிறது. நடிகர்களை பொறுத்தவரையில் 1977ம் ஆண்டு பைரவி படத்தில் இருந்து வெளிவர இருக்கும் கோச்சடையான் வரை அந்த நாற்காலியில் அசையாமல், யாராலும் அசைக்க முடியாமல் உட்கார்ந்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இனி அவர் நடிக்காவிட்டாலும் அவர்தான் நம்பர்-1.
 
நயன்தாரா...!
 
இப்படி ஒருவர் நடிகைகளில் இல்லை. இப்போது எவரும் இல்லை. சம்பளத்தை அடிப்படையாக கொண்டு பார்த்தால் நயன்தாரதான் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்குகிறார். நண்பேண்டா படத்திற்கு ஒன்றரை கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு சேர்த்து என்றால் இரண்டு கோடி வாங்குவார். அனுஷ்கா, சமந்தா, காஜல் அகர்வால், ஹன்சிகா அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறார்கள். ஸ்ருதிஹாசனும், அசினும் அதிக சம்பளம் வாங்கினாலும் அவர்கள் தமிழ் படங்களில் அக்கறை காட்டவில்லை.
 
அனுஷ்கா...!
 
மோஸ்ட் வாண்டட் ஹீரோயின்களில் முதல் இடத்தில் இருப்பவர் அனுஷ்கா, சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து அஜீத், சூர்யா படம் வரைக்கும் அவருக்காக வெயிட்டிங்கில் இருக்கிறது. தெலுங்கில் ராணிருத்ரமாதேவி, பாகுபாலி போன்ற பிரமாண்ட படங்களில் சிக்கிக் கொண்டதால் அவரால் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை. ஆனாலும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அவர்தான் மோஸ்ட்வாண்டட் ஹீரோயின். அடுத்தடுத்த இடத்தில் சமந்தா, நயன்தாரா, காஜல் அகர்வால், ஹன்சிகா இருக்கிறார்கள்.
 
ஹன்சிகா...!
 
அதிக படங்களில் நடிப்பவர் என்ற கேட்டகிரியில் முதல் இடத்துக்கு வருகிறார் ஹன்சிகா. அரண்மணை, உயிரே, மீகாமென், ரோமியோ ஜூலியட் என நான்கு படங்களில் நடித்து வருகிறார். இன்னும் இரண்டு பெயரிடப்படாத படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். காதல் விவகாரம் ஒன்றைத் தவிர ஹன்சிகா தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை. முடிந்தவரை சின்சியராக நடித்துக் கொடுப்பார். சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுப்பார். இவருக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு படங்களில் தான் நடிக்கிறார்கள். இப்படி ஒவ்வொரும் தனித்தனி தகுதிகளில் முதலிடத்தில் இருப்பதால் யார் நம்பர்-1 என்பதை கணிக்க முடியவில்லை.
 
லட்சுமி மேனன் - ஸ்ரீதிவ்யா...!
 
இவர்கள் தவிர இன்னொரு அணி முதல் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த அணியில் லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா ஆகியோர் இருக்கிறார்கள். இந்த அணியில் இருந்த நஸ்ரியா திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப் போகிறார். அமலாபாலும் திருமணத்துக்கு தயாராகிவிட்டார். எனவே இருவரும் இந்த அணியில் இருந்து விலக்கிக் கொள்ள, களத்தில் இருப்பது லட்சுமிமேனனும், ஸ்ரீதிவ்யாவும்தான். ஒரு பெரிய ஹீரோயினுக்குரிய தோற்றமோ, கிளாமரோ இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு பெண் என்கிற இமேஜ், நடிப்பு திறன், எளிமை இவற்றால் முதலிடம் நோக்கி நகர்கிறார்கள். இந்த கேட்டகிரியை சேர்ந்த சாவித்ரி, ரேவதி, சரிகா போன்றவர்கள் சில காலம் நம்பர்-1 நாற்காலியில் இருந்திருக்கிறார்கள்.
 
பென்சில், ஜீவா, டாணா, காட்டுமல்லி, நாகபுரம், ஈட்டி என 6 படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா. மஞ்சப்பை, நான் சிவப்பு மனிதன். சிப்பாய், ஜிகிர்தண்டா, வசந்த குமாரன் என 5 படங்களில் நடித்து வருகிறார் லட்சுமி மேனன். இருவருமே 50 லட்சம் முதல் 75 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார்கள். தொடர்ந்து மூன்று ஹிட் படங்களில் நடித்தவர் என்ற வகையில் லட்சுமிமேனன் முதலிடத்தில் இருக்கிறார்.
 
எப்படி கூட்டி கழித்து பார்த்தாலும் நம்பர்-1 நாற்காலிக்கு யார் சொந்தமானவர் என்று யாராலும் கணிக்க முடியாது. ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தவரை அந்த நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்...

Comments