இசைஞானி இளையராஜா ரசிகர் மன்றம் தொடங்குகிறார்!!!!!

19th of March 2014
சென்னை::இசைஞானி இளையராஜா சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவருக்கு ஆங்காங்கே சில தனி நபர்கள் ரசிகர் மன்றம், நற்பணி மன்றம் அமைத்திருந்தாலும். அதனை இளையராஜா அங்கீகரித்ததில்லை. அதோடு அதில் உடன்பாடு இல்லாதவராக இருந்தார். "என் இசையை கேட்டு ரசித்துவிட்டு போங்கள், எதற்கு மன்றம் கூட்டம் எல்லாம்" என்பார். சமீபகாலமாக இளையராஜா தனது பழைய கட்டுப்பாடுகளையெல்லாம் உடைத்து வருகிறார்.

ஒரு காலத்தில் மேடை கச்சேரிகளையே விமர்சனம் செய்து வந்தார். "நான் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில ஒலிப்பதிவு செய்து தருவது போன்ற நேர்த்தியை மேடை கச்சேரிகளில் தர முடியாது என் இசையை கெடுக்கிறார்கள்" என்று சொல்லி வந்தார். ஆனால் இன்றைக்கு அவரே மேடைகளில் பாடி வருகிறார். சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி வந்தார். இப்போது சில படங்களில் தோன்றி வருகிறார். செல்வா இயக்கும் ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு தோன்றியுள்ளார். விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் இப்போது ரசிகர் மன்றம் தொடங்க திட்டமிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க அவர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக இளையராஜா ரசிகர் மன்றம் என்ற அமைப்பு தொடங்கப்படுகிறது. அவரது மகன் கார்த்திக்ராஜா தலைமையில் இது செயல்படும். தயாரிப்பாளர்கள் பி.வேலுசாமி, ரத்னகுமார் ஆகியோர் இதன் நிர்வாக அறங்காவலர்களாக இருப்பார்கள்.

இளையராஜாவின் ரசிகர்கள் அவரின் இசையால் ஈர்க்கப்பட்டு தங்களுக்கென்று சில கொள்கை பிடிப்புகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை சமூக விழிப்புணர்வு, சேவைகளில் ஈடுபடுத்தி நல்வழிப்படுத்தவே இந்த அமைப்பு தொடங்கப்படுகிறது. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்பாக இது செயல்படும். வருகிற ஏப்ரல் 5ந் தேதி மதுரை தமுக்கம் மைதனாத்தில் நடக்கும் விழாவில் இது முறைப்படி துவக்கி வைக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments