வசனகர்த்தாவாக மாறிய நடிகர் சிவா!!!

13th of March 2014
சென்னை::சென்னை 600 028’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் சிவா. தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்துள்ள இவர் தற்போது வசனகர்த்தாவாகவும் மாறியுள்ளார்.

சிவா நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தை இயக்கிய பத்ரி தற்போது ‘ஆடாம ஜெயிச்சோமடா’ என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில்தான் சிவா வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்.

இப்படம் கிரிக்கெட் ஊழலை மையமாகக் கொண்டு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை பாத்திரங்கள் என எல்லாவற்றையும் சேர்ந்து காமெடியாக உருவாகி வருகிறது.

இப்படத்தில் ‘சூது கவ்வும்’ புகழ் கருணாகரன், ‘நேரம்’, ‘ஜிகர்தண்டா’ புகழ் சிம்ஹா, பாலாஜி, விஜயலட்சுமி, ‘ஆடுகளம்’ நரேன், ராதாரவி, விச்சு, சித்ரா லட்சுமணன், சேத்தன், அபிஷேக் இவர்களுடன் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். துவாரகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக ‘தளபதி’ தினேஷ் மகன் ஹரி தினேஷ் அறிமுகமாகிறார்.

சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இசை வெளியீடு ஏப்ரல் மாதமும், படத்தை மே மாதம் கோடை விடுமுறையில் வெளியிடவும் திட்டமிட்டு
வருகிறார்கள்.

Comments