’49 ஓ’ திரைப்படம் பற்றி கவுண்டமணி விளக்கம்!!!

14th of March 2014
சென்னை::கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு 49 ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் அவர்தான் ஹீரோ. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் படம்.
இந்தப் படத்தில் நடிப்பது ஏன் என்று கவுண்டமணி விளக்கம் அளித்துள்ளார், அவர் கூறியிருப்பதாவது:
2010ல், நான் நடிச்ச ஜக்குபாய், பொள்ளாச்சி மாப்ள படங்கள் ரிலீசாச்சு இப்போ 4 வருஷத்துக்கு பிறகு நடிக்க வந்திருக்கேன். நான் என்னமோ ராமர் வனவாசம் போன மாதிரி 14 வருஷம் கழிச்சு வந்த மாதிரி பேசுறாங்க. நடிகன்னா சின்ன கேப் விடுவான்.
அப்புறம் மளமளன்னு நடிப்பான். சினிமாவுல இதல்லாம் சாதாரணமப்பா, 49 ஓ டைரக்டர் ஆரோக்கியதாஸ் என்னை விடாம துரத்தினாரு. உங்கள மனசுல வச்சு எழுதிய கதைன்னு சொன்னாரு, அவரோட ஆர்வமும், தன்னம்பிக்கையும் பிடிச்சுது, சரிப்பா நடிக்கிறேன்னு வந்துட்டேன்.
படத்துல நான்தான் ஹீரோ. நம்ம நாட்டுல விவசாயம் செத்துக்கிட்டு இருக்கு. அட நானும் விவசாயிதானுங்க. அதான் விவசாயியாக நடிக்க ஒத்துக்கிட்டேன். 49ஓ ன்னா அரசியல் படமும் இல்லை. அரசியல்வாதிகளை தாக்கவும் இல்ல. விவசாயம் தான் கதை.
நடவு நடப்போனா வெயில் அடிச்சு கெடுக்குது. கதிர் அறுக்கப்போனா மழை பெஞ்சு கெடுக்குது. ஆனாலும் விவசாயி நம்பிக்கையோட இருக்கான். அந்த நம்பிக்கைதான் நமக்கு சோறு போடுது. அவனை கொஞ்சம் மதிங்கப்பான்னு சொல்றதுக்குதான் இந்த படம்.
இவ்வாறு கவுண்டமணி கூறியுள்ளார்.
 

Comments