புலிவால் – விமர்சனம்!!!

8th of February 2014
சென்னை::பரபரப்பான அண்ணாசாலை.. அதில் அமைந்துள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மதிய நேரம்.. ஊழியர்கள் சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ராஜூ தான் வாங்கிய புதிய மொபைலில் தன்னைத்தானே படம் எடுத்துக்கொண்டிருந்தான். சற்று தள்ளி அமர்ந்திருந்த சதாசிவம் அதைப்பார்த்து விட்டு பெருமூச்சுவிட்டார்.. அவர் அருகில் அமர்ந்திருந்த சிவா அதைப்பார்த்துவிட்டு அவரிடம் கேட்டான்.

சிவா : என்னண்ணே.. ராஜு சூப்பர் மொபைல் வாங்கிட்டான்னு பொறாமைப்படுறீங்களா?

சதாசிவம் : அட நான் ஏன்ப்பா பொறாமைப்படுறேன்.. எனக்கு மொபைல்போன்ல எல்லாம் அவ்வளவு இண்ட்ரெஸ்ட் இல்லப்பா.. பேருக்கு ஏதோ ஒண்ணு இருந்தா சரி.. நேத்து நைட்டு புலிவால் படத்துக்கு போய்ட்டு வந்தேன்.. இந்த செல்போனை பாத்ததும் அந்த ஞாபகம் வந்துருச்சு..
சிவா : நீங்க எப்ப பார்த்தாலும் சினிமா நெனப்புலயே இருக்கீங்கண்ணே.. சரி புலிவாலுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..?

சதாசிவம் : சொல்றேன்.. அதுக்கு முன்னாடி நான் கேட்குற கேள்விக்கு பதிலைச் சொல்லு.. உங்கிட்ட யாரோ தவறவிட்ட விலை உயர்ந்த செல்போன் கிடைக்குதுன்னு வை.. நீ என்னா பண்ணுவ..?
சிவா : அது யாரு என்னன்னு விசாரிச்சு அவங்ககிட்ட எப்படியாவது திரும்ப சேத்துருவேன்.

சதாசிவம் : நல்லா சொன்னப்பா.. ஆனா அப்படி கொடுக்காம வச்சுக்கிட்டா என்ன ஆகும்ங்கிறது தான் இந்த புலிவால் படத்தோட கதை..
சிவா : அண்ணே.. சொல்றதை கொஞ்சம் விபரமா சொல்லுங்கண்னே..? என்று கேட்க அவர்கள் பேசுவதை பார்த்த ராஜுவும் அவர்கள் அருகில் வந்து அமர்கிறான்.

சதாசிவம் : வா ராஜு.. நீயும் கவனமா கேளு.. நம்மள மாதிரியே ஒரு சூப்பர் மார்க்கெட்ல வேலை பாக்குறாங்க விமல், அனன்யா, சூரி மூணுபேரும். ஒரு பழைய மொபைல வச்சுக்கிட்டு அதுக்கு பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் கூட பண்ணமுடியாத மிஸ்டுகால் பார்ட்டி விமல்.. அவர் கையில பிரசன்னா தவறவிடுற காஸ்ட்லி மொபைல் கிடைக்குது..

ராஜூ : பிரசன்னா இதுல எங்க வர்றாரு..?
சிவா : எப்பா.. அவரு பெரிய கோடீஸ்வரர்.. அவருக்கும் அவரோட பி.ஏ.வாவும் காதலியாவும் இருக்குற ஓவியாவுக்கும் சண்டை.. ஒரு ரெஸ்டாரண்ட்ல ஓவியாவை சமாதனப்படுத்துறப்பத்தான் மொபைல மிஸ் பண்ணிடுறாரு பிரசன்னா.. அங்க வர்ற விமல் கையில அது மாட்டுது..
சிவா : சரி.. அப்புறம்..?

சதாசிவம் : பிரசன்னா தொலைஞ்சுபோன தன்னோட போனுக்கு கால் பண்ணி பண்ணி பாக்குறாரு.. ஒண்ணு சுவிட்ச் ஆப்னு வருது.. இன்னொரு சமயம் போன் ஆன்ல இருக்கு. ஆனா அத வச்சுருக்க விமல் பேசமாட்டிங்கிறாரு.. இங்க பிரசன்னாவுக்கு ஒரே டென்ஷன்..

ராஜூ : இதுல என்ன டென்ஷன்..? அவரு கோடீஸ்வரர் தான..? இன்னொரு போன் வாங்கிக்கவேண்டியதுதான..?

சதாசிவம் : சிக்கலே அங்கதான இருக்கு.. அந்த போன்ல ஒரு முக்கியமான வீடியோ ஒன்னு மாட்டிக்கிடுச்சுப்பா.. அது வெளில போச்சுன்னா மானக்கேடுன்னு தான் பிரசன்னா பதறுறாரு..
ராஜூ : அப்படி என்னா மானக்கேடு வந்துற போகுது..?

சிவா : இருடா.. நான் சொல்றேன்.. அண்ணே நீங்க சொல்றத வச்சு பாத்தா, பிரசன்னா, ஓவியா சம்பந்தப்பட்ட வீடியோதான் அதுல இருக்கணும்.. அதனால தான் ரெண்டுபேருக்கு நடுவுல சண்டையும் வந்திருக்கணும்.. சரியாண்ணே..?

சதாசிவம் : சரியா சொன்னப்பா.. ரெண்டுபேரும் அந்தரங்கமா இருக்குற வீடியோ தான் அதுல மாட்டிக்கிச்சுப்பா..
ராஜூ : சரிண்ணே.. அந்த போன வச்சு விமல் என்ன பண்றாரு.. பிளாக் மெயிலா..?

சதாசிவம் : விமலுக்கு அந்த போன்ல இருந்து கால் பண்ணக்கூட தெரியாதுப்பா..
சிவா : அப்புறம்..?

சதாசிவம் : ம்ம்.. விழுப்புரம்.. விமல் என்ன பண்றாரு.. பிரசன்னா போனை கண்டுபிடிச்சாரா..அந்த வீடியோ லீக் ஆச்சான்னு எல்லா கதையையும் நானே சொல்லிட்டா.. போய் தியேட்டர்ல படத்தை பாருங்கப்பா.. காசுபோட்டு படத்தை எடுத்திருக்காங்கள்ல..?

சிவா : சரி கதைய சொல்லவேணாம்.. ஆனா இப்ப வர்ற படங்கள்ல எல்லாம் விமல் ஒரே மாதிரி நடிக்கிறார்னு சொல்றாங்களே.. நானும் கூட ஒண்ணு ரெண்டுபடத்துல பார்த்தேன்.. இதுல எப்படி..?

சதாசிவம் : ஆரம்பத்துல ஒரு முக்கால் மணி நேரம் சாதாரண படமாத்தான்பா போகுது.. அதுக்கப்புறம் படம் போற ஸ்பீடுல விமலும் பிரசன்னாவும் எங்க நம்ம கண்ணுக்கு தெரியுறாங்க..? அந்த கேரக்டருங்கதான் தெரியுது.. சும்மா சொல்லக்கூடாது.. பிரசன்னாவும் விமலும் க்ளைமாக்ஸ்ல கடைசி இருபது நிமிஷம் புகுந்து விளையாடிருக்காங்கப்பா.. இதுல விமல் பண்ற டார்ச்சர்தான் ஹைலைட்..

சிவா : ஓவியா, அனன்யா, இனியான்னு மொத்தம் மூணு ‘யா’க்களும் எப்படி..?
சதாசிவம் : இதுல ஓவியாவுக்குத்தான்பா நல்ல ஸ்கோப் இருக்கு.. அந்தப்பொண்ணும் நல்லா நடிச்சிருக்கு.. விமல் கூடவே வேலை பாத்துக்கிட்டு அவர காதலிக்கிற அனன்யாவுக்கு பெருசா வேலை எதுவும் இல்ல.. ஆனா விமலை அடிக்கடி இடிக்கிறப்ப மட்டும் அதே துறுதுறு

அனன்யா..
ராஜு : அப்ப இனியா..?
சிவா : இருய்யா.. இனிமே தான்யா சொல்லுவாரு.. பறக்காத..
சதாசிவம் : எலேய்.. நீ இனியாவுக்காகவே ‘மௌனகுரு’ படத்தை மூணுவாட்டி பாத்தவன் தான..? ஆனா இதுல உனக்கு ஏமாற்றம் தாண்டா.. உன் ஆளு வெறும் நாலே நாலு சீன்ல மட்டும் தான் வருது.. பிரசன்னாவை கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணா.. அதுவும் போன்ல பேசுற சீன் தான்..
சிவா : சரி.. இவ்வளவு சீரியஸான விஷயத்துல சூரிக்கும் தம்பி ராமையாவுக்கும் என்ன வேலை..?

சதாசிவம் : தம்பிராமையா சூப்பர் மார்க்கெட் ஓனரு.. சூரி விமல்கூட வேலை பாக்குறவரு.. சூரி பிஸியா இருக்குறதுனாலயோ என்னவோ அவர்கிட்ட ரெண்டு நாள் கால்ஷீட்ட மட்டும் வாங்கி சூப்பர் மார்க்கெட்லயே வச்சு அவரோட போர்ஷனை முடிச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன்.. எஸ்.எம்.எஸ்ல வர்ற தத்துவமா சொல்ற கேரக்டர்.. அதனால இருபது எஸ்.எம்.எஸ் ஜோக்கை வச்சே முடிச்சுட்டாங்க.. காஸ்ட்யூம் கூட சூப்பர் மார்க்கெட் யூனிஃபார்ம் தான்..
சிவா : தம்பி ராமையா…?

சதாசிவம் : அவர் அதிகம் பேசுறாருப்பா.. ஆனால் அவரு பேசி சிரிக்க வைக்கிறதவிட, தன் கடைல வேலை பாக்குற ஒரு ஆண்ட்டிகிட்ட மைண்ட் வாய்ஸ்ல பேசுற லவ் டயலாக் இருக்கே.. அதுக்கு தாராளமா சிரிக்கலாம்ப்பா..
சிவா : வேற யாரும் சொல்லிக்கிற மாதிரி..?

சதாசிவம் : பிரசன்னாவோட பிரண்ட்டா வர்ற பிரேம், அப்புரம் செல்போன் கடை வச்சு வில்லங்கத்தை விலைக்கு வாங்குற சேது, ரெண்டு சீன்ல வந்துட்டு சாணி அபிஷேகம் வாங்கிட்டுப் போற சொர்ணமால்யா, அந்த மைண்ட் வாய்ஸ் ஆண்ட்டி.. இவங்க நாலு பேரும் நல்லா பண்ணிருக்காங்கப்பா.. நம்ம பிளேடு பாலாஜிகூட அப்பப்ப வந்து போறாரு.
ராஜூ : பாட்டுலாம் எப்படிண்ணே..?

சதாசிவம் : மூணு பாட்டுப்பா.. ரகுநந்தன் மியூசிக் பண்ணிருக்காரு.. இடைவேளைக்குப் பின்னாடி வர்ற ஒரு ஃபாஸ்ட் பீட் சாங்.., அதான்ப்பா ஹீரோ ஆவேசமா எதையாவது இல்லை யாரையாவது தேடி சிட்டிக்குள்ள சுத்தற மாதிரி காட்சியில போடுவாங்கள்ல அந்த மாதிரி பாட்டு.. அது நல்லா இருக்குப்பா.. அதே மாதிரி ஒளிப்பதிவும் பரவாயில்லைப்பா.. சேஷிங் சீன்ல மெனக்கெட்டு இருக்காருங்கப்பா..

சிவா : டைரக்டர் மாரிமுத்துன்னு போட்ருந்துச்சு.. யாருண்ணே புதுசா..?
சதாசிவம் : ஏம்ப்பா.. இந்த மாரிமுத்துவையா யாருன்னு கேக்குற..? ‘பிரசன்னாவ வச்சு ஆறு வருஷத்துக்கு முன்னாடி ‘கண்ணும் கண்ணும்’னு ஒரு படத்தை டைரக்ட் பண்ணினாரே.. அவர்தான்பா..
சிவா : அண்ணே. இது ஏற்கனவே மலையாளத்துல வெளியான ‘சாப்பா குருசு’ படத்தோட ரீமேக் தான்னு எனக்கு தெரியும்.. ஆனா அதை நம்ம தமிழுக்கு ஏத்த மாதிரி மாத்தியிருக்கிறாரா மாரிமுத்து..?

சதாசிவம் : மலையாளத்துல இது எப்படி இருந்துச்சுனு தெரியாது.. ஆனா ரீமேக் படம்னு தெரியாத மாதிரி தான் பண்ணிருக்காரு. அதுவுமில்லாம.. இது செல்போன் சம்பந்தப்பட்ட கதைங்கிறதால.. எந்த மொழில எடுத்தாலும் செட் ஆகும்..

ராஜூ : செல்போன்னு சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது.. அண்ணே என் புது போனை பாத்தீங்களா.. எப்டி இருக்கு..? என தன் போனை அவரிடம் நீட்டுகிறான் ராஜு.

சதாசிவம் : தம்பி நீ இளம் வயசுக்காரன்.. படத்துல மாரிமுத்து என்ன சொல்லிருக்காரோ அதையேதான் இப்ப நான் உனக்கு சொல்றேன்.. யாருடைய செல்போனாவது தொலஞ்சுபோயி உன் கையில கிடச்சுதுன்னா உடனே அவங்ககிட்ட ஓப்படைக்கிற வழிய பாருங்க.. ஏகப்பட்ட பிரச்சனைகள அப்பவே தவிர்த்துரலாம். இன்னொன்னு காதலர்களா இருக்கட்டும்.. இல்ல புருஷன்..பொண்டாட்டியா இருக்கட்டும்.. உங்களோட அந்தரங்கமான விஷயங்களை வீடியோவாகவோ, இல்லைன்னா போட்டோவாகவோ தயவு செஞ்சு எடுக்காதீங்க.. தம்பி உன்ன மாதிரி இளவட்டங்கதான் இத நல்லா கேட்டுக்கணும். நான் சொல்றதவிட நீங்களே ஒரு எட்டு ‘புலிவால்’ படத்துக்கு போயி என்னதான் சொல்லியிருக்காங்கன்னு முழுசா பாத்துட்டுதான் வந்துருங்களேன்..

சிவா : சூப்பர் மார்க்கெட்ல வேலை பாக்குற நம்மளப் பத்தின படம் தான..? விடுங்க.. நம்ம ஓனர்கிட்ட போயி, எல்லாருக்கும் இன்னைக்கு செகண்ட்ஷோ டிக்கெட் போட்டுத்தர சொல்லி பாத்துருவோம்...
tamil matrimony_HOME_468x60.gif
 

Comments