பிரம்மன் – விமர்சனம்!!!

22nd of February 2014
சென்னை::கோவையில் உள்ளுர் தியேட்டரை லீசுக்கு எடுத்து படம் ஓட்டுகிறார் சசிகுமார். வருமானம் குறைவால், வரி கட்ட முடியாமல் தியேட்டர் மூடப்படும் அபாயம் ஏற்படுகிறது. அஞ்சு லட்ச ரூபாய் புரட்ட வேண்டும் என்பதற்காக இதுநாள் வரை பிரிந்திருந்த தனது சிறுவயது நண்பனும் சினிமா இயக்குனருமான நவீன் சந்திராவை பார்த்து உதவி கேட்க செல்கிறார் சசி. நண்பனை சந்திக்க முடியவில்லை.. ஆனால் பணம் வேறுவிதமாக கிடைக்கிறது.. கூடவே சசிகுமாருக்கு அது அவரது காதல் உட்பட பல விஷயங்களில் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. இதை சசி எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை..
 
சசிகுமார் கிராமத்திலிருந்து நகரத்துக்கு மாறியிருப்பதால் ஸ்டைலிலும் தன்னை கொஞ்சம் மாற்றியிருக்கிறார். இரண்டு ஃபைட், இரண்டு டூயட் என்ற ஃபார்முலாவுக்குள் நுழைய முயற்சி செய்திருக்கிறார்.. சண்டைக் காட்சிகளில் அடித்து பின்னுகிறார். ஆனால் வலிந்து திணிக்கப்பட்ட வெளிநாட்டு பாடல்காட்சிகள் சசியுடன் ஒட்டவில்லை.. தனக்கு கிடைத்த ஒவ்வொரு இடத்திலும் நண்பனுக்காக விட்டுக்கொடுத்து நட்பை தூக்கிப் பிடிக்கிறார். ஆனால் வழக்கமான கிராமத்து சசியிடம் இருக்கும் துள்ளல் இதில் மிஸ்ஸிங்.
 
ஹீரோயினாக லாவண்யா திரிபாதி. களையான முகம்.. நடிப்பும் நன்றாக இருக்கிறது. சசிகுமாரின் நண்பனாக வரும் நவீன் சந்திரா திரைப்பட இயக்குனருக்கான முதிர்ச்சியை நடிப்பில் காட்டியிருக்கிறார்.
படத்தின் முதல் பாதியில் சந்தானம், இரண்டாவதில் சூரி என காமெடியை பங்கு பிரித்துக்கொள்கிறார்கள். சசி, சந்தானம் காம்பினேசன் நன்றாக இருந்தாலும் காமெடி காட்சிகள் குறைவோ என்றே தோன்றுகிறது.. சென்னை சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டும் சூரி வந்து போகிறார்.
தயாரிப்பாளராக வரும் ஜெயபிரகாஷ், சசியின் துறுதுறு தங்கை, உதவி இயக்குனராக வரும் சாம்ஸ் இவர்கள் மூவரும் அத்தனை கூட்டத்திலும் நம்மை கவனிக்க வைக்கிறார்கள்.
 
தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை நன்றாக இருப்பதுபோல தோன்றினாலும் சசிகுமார் படத்திற்கான உற்சாகத்தை தரவில்லை என்பது தான் உண்மை.
கமலிடம் உதவியாளராக இருந்த சாக்ரடீஸ் என்பவர் படத்தை இயக்கியுள்ளார். கல்யாண மண்டபங்களாக மாறிவரும் தியேட்டர்களின் அவல நிலையை சொல்ல
முற்பட்டதற்கு பாராட்டுக்கள். ஆனால் அதை காமெடியாகவோ அல்லது சீரியஸாகவோ கொண்டு செல்வதில் நன்றாகவே குழம்பியிருக்கிறார். சசி தியேட்டரை மீட்க
சென்னைக்கு கிளம்பும்போது இனி அதைச்சுற்றித்தான் கதை நகரும், தியேட்டர்களை தொடர்ந்து நடத்துவதற்கான தீர்வை சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
 
இடைவேளைக்குப் பின் சசிக்கு படம் இயக்க வாய்ப்பும் அதற்கு அட்வான்ஸ் பணமும், படம் இயக்க அனுபவம் வேண்டும் என்பதற்காக உதவி இயக்குனராக வேலை
பார்க்கும் வாய்ப்பும் என நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள் எல்லாம் எளிதில் கிடைப்பது சினிமாவில் இயக்குனராக நினைத்து வருபவர்களை திசை திருப்பி விடுமோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. இந்த வேலைக்கு சசியும் உடன்பட்டிருப்பதுதான் வருத்தம் அளிக்கிறது.
 
மொத்தத்தில் வீரியமான கதைக்குள் சசிகுமார் நடிக்கும்போது அந்த கதைக்கே உயிர்வந்துவிடுகின்ற வித்தையைத்தான் இதுநாள்வரை பார்த்து வந்தோம். ஆனால் இந்தப்படத்தில் சசிகுமாரை ஹீரோவாக வைத்து கதை பின்னப்பட்டதாலோ என்னவோ அந்த வீரியம் குறைந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது..
 
இனி சசிகுமார் கவனமாக செயல்படவேண்டிய தருணத்தை இந்தப்படம் உருவாக்கிவிட்ட்து…
tamil matrimony_HOME_468x60.gif




Comments