டைரக்டர் பாலுமகேந்திரா மாரடைப்பால் காலமானார்!!!

13th of February 2014
சென்னை::டைரக்டர் பாலு மகேந்திரா மாரடைப்பால் இன்று காலமானார். இவர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சாலிகிராமம் இந்திராநகரில் உள்ள தனது வீடடில் தூங்கிக் கொண்டிருந்த பாலு மகேந்திராவிற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலு மகேந்திராவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலு மகேந்திராவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறினர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பாலு மகேந்திராவின் உயிர் பிரிந்தது. டைரக்டர் ராம், பாலா, பாலாவின் உதவியாளர் சீனு ராமசாமி, கருணாஸ் மற்றும் உதவி இயக்குனர்கள் பலர் மருத்துவமனையில் உடன் இருந்தனர்.

74 வயதாகும் பாலுமகேந்திரா தனது மனைவி அகிலேஷ்வரி மற்றும் மகனுடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

டைரக்டராகவும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரைஉலகில் மட்டுமின்றி இந்தியிலும் பல படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா. இலங்கையின் பட்டிகலோயா பகுதியில் 1939ம் ஆண்டு பிறந்த இவர் 1971ம் ஆண்டு நெல்லு என்ற மலையாள படத்தில் கேமிராமேனாக திரைஉலகிற்கு அறிமுகமானார். தனது தந்தையால் கேமிரா மீது ஆர்வம் கொண்ட இவர், இந்திய சினிமாவில் டைரக்டர், வசனகர்த்தா, எடிட்டர், ஒளிப்பதிவாளர் என பல பரிமாணங்களில் வலம் வந்தவர். இலங்கையில் பள்ளி படிப்பை முடித்த இவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பை முடித்தார். பின்னர் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் ஒளிப்பதிவு பயின்ற இவர், அதற்காக தங்க பதக்கமும் பெற்றுள்ளார். இயற்கை வெளிச்சத்தில் எளிமையான, அதே சமயம் பிரமிக்க வைக்கும் அழகை காட்டி படம் எடுப்பதில் பாலு மகேந்திரா கைதேர்ந்தவர். இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படமான நெல்லு படத்திற்காக கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை பெற்றார்.

சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய 1979ம் ஆண்டு ஆழியாத கோலங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அடிஎடுத்து வைத்தார். மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்திய ராகம், வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனாகாலம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் தலைமுறைகள் என்ற படத்தையும் இவர் இயக்கி உள்ளார்.

பாலு மகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments