பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார்!!!

24th of January 2014சென்னை::பிரபல பின்னணி பாடகரும், நடிகர் விஜயின் உறவினருமான எஸ்.என்.சுரேந்தரின் மகன் விராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

யவராஸ் இண்டெர்நேஷனல் சார்பாக கே.ஆர்.மாணிக்கவாசகம், குட் டைம் ஃபிலிம் எண்டேர்டைமெண்ட் சார்பாக நசியனூர் பழனிச்சாமி, எஸ்.வி.தீபாராணி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் 'மொழிவது யாதெனில்'.

முழுக்க முழுக்க நட்பை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தின் கதை எழுதி, எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தரின் மகன்  விராஜ் நடிக்கிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக அந்நியன் படத்தில் சிறு வயது ‘அம்பி’ விக்ரம் வேடத்திலும், வெங்கட் பிரபுவின் 'சென்னை 600028' படத்தில், சிவாவின் அணியை தோற்கடிக்கும் பள்ளி சிறுவர்கள் அணியின் கேப்டனாகவும் நடித்தவர். மேலும் சில படங்களில் சிறுவனாக நடித்து பாராட்டு பெற்றவர், முதன்முறையாக இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இவருடன் ராஜன், ரியாஷ், தேஜ், மீனு கார்த்திகா, லஸ்யா, பாலு ஆனந்த், தேனி முருகன், அஞ்சலிதேவி உட்பட பலர் நடிக்க, கெளரவ வேடத்தில் எஸ்.என்.சுரேந்தர் நடிக்கிறார். கானா பாலா ஒரு பாடலை பாடி நடிக்கிறார்.

நித்யன் கார்த்திக் இசையமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘தம்பி’ சிவா நடனம் அமைக்க, ‘மிரட்டல்’ செல்வா சண்டை பயிற்சி அமைத்திருக்கிறார். திரைக்கதை, வசனத்தை இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக், இயக்குநர் எஸ்.கோபாலகிருஷ்ணன் இருவரும் இணைந்து எழுதி உள்ளனர். படத்தொகுப்பு வில்சி.

படம் பற்றி இயக்குநர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறுகையில், "உயிரை காப்பாற்றிய நண்பனின் கடனுக்காக, தங்களது வாழ்க்கையையே தியாகம் செய்யும் இரண்டு நண்பர்களின் கதை. அதை நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் படமாக உருவாக்கி வருகிறேன். ஈரோடு, பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் படமாக்கியிருக்கிறேன். பொழுதுபோக்கு அம்சம் உள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும்." என்று தெரிவித்தார். ::
tamil matrimony_HOME_468x60.gif

Comments