இந்திக்கு போகும் சசிகுமார்!!!

18th of January 2014
சென்னை::சசிகுமார், இயக்கி, தயாரித்து நடித்த முதல் படமான 'சுப்பிரமணியபுரம்' படம் தமிழ் மட்டும் இன்றி மலையாளத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டும் இன்றி, மலையாளத்தில் அப்படத்தின் திரைக்கதை புத்தகமாக வெளிவந்தது. பிறகு தமிழில் வெளியான இந்த புத்தகம் தற்போது ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது.

அருண் பாண்டியன், ராகேஷ் கண்ணா ஆகிய அமெரிக்கவாழ் இந்தியர்களால் ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ள சுப்பிரமணியபுரம் திரைக்கதை புத்தகம் நேற்று, சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. இதில் இயக்குநர் கெளதம், எழுத்தாளர் சு.வெங்கடேஷன், திரைப்பட விமர்சகர் பரத்வாஜ், சுப்பிரமணியபுரம் படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், அதில் வில்லனாக நடித்த இயக்குநர் சமுத்திரக்கனி ஆகியோர் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஜேம்ஸ் வசந்தன், சுப்பிரமணியபுரம் படத்திற்கு இவ்வளவு அங்கீகாரம் கிடைத்ததற்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது, அதே சமயம் இந்த படத்தை இந்தியிலும் எடுக்க வேண்டும் என்பது என்னுடையை ஆசை என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, இயக்குநரும், நடிகருமான சசிகுமார், "சுப்பிரமணியபுரம் படம் எடுக்கும்போது இப்படியெல்லாம் நடக்கும் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால், இந்த படம் பெரிய அளவில் எனக்கு அங்கீகாரத்தை கொடுத்தது. இப்படத்தின் இந்தி உரிமையை நான் யாருக்கும் கொடுக்கவில்லை. காரணம், இந்தியிலும் நானே இப்படத்தை இயக்க உள்ளேன், இயக்குநர் அனுராக் காஷ்யப் திரைகக்தை எழுத உள்ளார். தற்போது அதிக படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அந்த வேலையில் ஈடுபட முடியவில்லை. ஆனால், விரைவில் சுப்பிரமணியபுரம் படத்தை இந்தியில் இயக்குவேன்." என்று கூறினார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments