கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு உயரிய பத்ம பூஷண் விருது!!!

 26th of January 2014சென்னை::
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுக்கு 127 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் நடிகர் கமலஹாசன், பாடலாசியர் வைரமுத்து உள்பட 9 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கலை, சமூக சேவை, மருத்துவம், சினிமா, விளையாட்டு, அறிவியல், வர்த்தகம், தொழில் துறை  உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று அறிவித்தார். மொத்த விருதுகளின் எண்ணிக்கை 127. இதில், 2 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 24 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 101 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட உள்ளது.

விருது பெறுபவர்களில் 27 பேர் பெண்கள். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 10 பேருக்கும் விருது தரப்படுகிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல விஞ்ஞானி ரகுநாத் ஏ.மசேல்கர், யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்காருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமலஹாசன், கவிஞர் வைரமுத்து, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், நடிகை வித்யா பாலன் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர். ஜனாதிபதி மாளிகையில் மார்ச் அல்லது ஏப்ரலில் நடக்கும் நிகழ்ச்சியில், இந்த விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவிக்க உள்ளார்.

பத்ம பூஷண் விருதுக்காக தமிழகத்தில் இருந்து நடிகர் கமலஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் கலைஞர் விநாயக்ராம், திருமலாச்சாரி ராமசாமி (அறிவியல் மற்றும் பொறியியல்) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் பத்மஸ்ரீ விருதுக்கு சந்தோஷ் சிவன் (ஆர்ட் பிலிம்), அஜய் குமார் பரிதா (அறிவியல் மற்றும் பொறியியல்), மல்லிகா சீனிவாசன் (வர்த்தகம் மற்றும் தொழில்துறை), பவுலோஸ் ஜேக்கப் (மருத்துவம்), ஹக்கீம் சயீத் கலிபதுல்லா (யுனானி மருத்துவம்), தீபிகா பாலிக்கல் (விளையாட்டு) உள்பட 107 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.::
tamil matrimony_HOME_468x60.gif

Comments