30-வது பிறந்தநாளை கொண்டாடிய ஜீவா: ஏழை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கினார்!

5th of January 2014
சென்னை::அடையாளத்தோடு, ஆசை ஆசையாய் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானாவர் நடிகர் ஜீவா. சினிமாவுக்கு வந்த சில காலங்களிலேயே ஈ, ராம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர். தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவாவுக்கு (ஜனவரி 4ம் தேதி) 30வது பிறந்தநாள். தனது பிறந்தநாளை சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் கொண்டாடினார். அப்போது அவரது ரசிகர்கள் அவருக்கு ஆள் உயர மாலை, சால்வை, பூங்கொத்து என கொடுத்து வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய ஜீவா, இந்த 2014ம் ஆண்டு எனக்கு வெற்றியோடு துவங்கியுள்ளது. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. சென்ற வருடம் இயக்குநர் சாய்ரமணி, அஹமது ஆகியோருடன் எனது புத்தாண்டு மற்றும் பிறந்தநாளை கொண்டாடினேன். அவர்களது ராசி இப்போதும் தொடர்கிறது. அதனால் அவர்களை இந்தாண்டும் இங்கு வரவழைத்துள்ளேன். 18 வயதில் நான் சினிமாவுக்கு வந்தேன். இந்த 12 ஆண்டுகளில் வெற்றி மற்றும் தோல்வி படங்களை கொடுத்துள்ளேன். பத்திரிகையாளர்கள், நான் வெற்றி பெற்றபோது பாராட்டியும், தோல்வியின் போது அதை சுட்டிக்காட்டியும் உள்ளனர். இதை நான் வரவேற்கிறேன். அப்போது தான் நான் இன்னும் கூடுதலாக உழைக்க முடியும்.

இதுநாள் வரை நடிகராக இருந்த நான் ஜில்லா படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளேன். அந்த வாய்ப்பை கொடுத்த எனது அப்பாவுக்கு நன்றி. நான் தயாரிக்கும் முதல்படமே விஜய் படம் என எண்ணும் போது இன்னும் பெருமையாக இருக்கிறது. எனது பிறந்தநாளுக்கு நடிகர் விஜய், போன் மூலம் வாழ்த்து சொன்னார். எங்களது குடும்பத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் உள்ள நட்பு மிகப்பெரியது. ஜில்லா படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.

சினிமாவில் இத்தனை ஆண்டுகாலம் என்னை வெற்றி அடைய செய்து வரும் ரசிகர்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அப்படியே என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள், சககலைஞர்கள் மற்றும் எனது குடும்பத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்திய சினிமாவின் 100 ஆண்டு கால வரலாற்றில் எனது படங்களும் இருக்கிறது என்று நினைக்கும் போது பெருமையாக உள்ளது என்று கூறினார்.

ஜீவாவின் பிறந்தநாளில் 25 ஏழை பெண்களுக்கு இலவசமாக தையல் மிஷின் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் அஹமது, சாய்ரமணி, தயாரிப்பாளர் தமிழ்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments