பதட்டத்தில் செல்பேசி எண்ணை மாற்றிக் கொடுத்துவிட்டேன் - மயில்சாமி !!!

12th of December 2013
சென்னை::பணம் கேட்டு மிரட்டியதாக கூறியது பொய் புகாரா? என நடிகர் மயில்சாமியிடமே விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். மிரட்டல் வந்ததாக நடிகர் புகார் கொடுத்த எண்ணிற்கு நடிகர் மயில்சாமிதான் அதிக முறை பேசியதாக போலீஸ் தகவல்.
 
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தில் வசித்து வரும் நகைச்சுவை நடிகர் மயில்சாமி. இவர், 2 நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், ரூ.50ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உங்களது விஷயங்களை வெளியில் சொல்லி உங்களை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டதாக விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்து இருந்தார்.
 
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மயில்சாமியின் செல்போனுக்கு அழைப்பு வந்ததாக கூறப்படும் அந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நபர் யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அந்த செல்போன் எண் ஆயிஷா என்ற பெண்ணின் பெயரில் வாங்கி இருப்பது தெரிந்தது. அந்த எண்ணுக்கு 1-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை யாரெல்லாம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர் என்று போலீசார் விசாரித்தனர்.
 
அப்போது அந்த எண்ணுக்கு நடிகர் மயில்சாமியின் செல்போன் எண்ணில் இருந்துதான் தினமும் பல மணி நேரம் பேசியது பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து மயில்சாமியிடம், “புகார் கொடுத்த தொலைபேசி எண்ணுக்கு நீங்களே அதிகளவில் பேசி உள்ளீர்களே?” என்று போலீசார் கேட்டதாகவும், அதற்கு அவர், “மிரட்டல் வந்த தொலைபேசி எண் அது இல்லை. நான் பதற்றத்தில் தொலைபேசி எண்ணை மாற்றி கொடுத்து விட்டேன். அது எனக்கு தெரிந்தவரின் தொலைபேசி எண்தான்”என்று கூறியதாகவும் தெரிகிறது.
 
சினிமா படப்பிடிப்பு விஷயமாக மயில்சாமி பெங்களூர் சென்று விட்டதாகவும், படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியவுடன் அவர் கொடுத்தது பொய்யான புகாரா? என்று அவரிடமே விசாரணை மேற்கொள்ள முடிவு செய்து உள்ளதாகவும் விருகம்பாக்கம் போலீசார் தெரிவித்தனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments