ரஜினியின் அடுத்த படம் இயக்குகிறேனா? கே.எஸ்.ரவிகுமார் பதில்!!!

17th of December 2013
சென்னை::ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறீர்களா? என்றதற்கு பதில் அளித்தார் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார்.
 
ரஜினி நடித்த ‘முத்து‘, ‘படையப்பா‘ படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‘ராணா‘ படத்தை இயக்குவதற்கான ஷூட்டிங் தொடங்கப்பட்டது. அப்போது ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அப்படம் கைவிடப்பட்டது.
 
இதையடுத்து மகள் சவுந்தர்யா இயக்கும் கோச்சடையான் படத்தில் ரஜினி நடித்தார். இப்படத்தின் டைரக்ஷன் மேற்பார்வை பொறுப்பை கே.எஸ்.ரவிகுமார் ஏற்றிருந்தார். ‘கோச்சடையான்‘ அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தையடுத்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை இயக்குவது பற்றி கோலிவுட்டில் பல்வேறு பேச்சுகள் எழுந்துள்ளது.
 
கே.எஸ்.ரவிகுமார்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்று தகவல் வெளிவந்துகொண்டிருக்கிறது. இதுபற்றி ரவிகுமாரிடம் கேட்டபோது, இந்த வதந்தி நீண்ட நாட்களாகவே உலவி வருகிறது. ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை நான் இயக்கவில்லை. ‘நான் ஈ‘ படத்தில் நடித்த சுதீப் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் பணிகளை விரைவில் தொடங்க உள்ளேன்.
 
இப்படத்துக்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் இறுதிகட்ட பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். விரைவில் அப்படம்பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரும் என்றார். இதேபோல் ரஜினியின் அடுத்த பட இயக்குனர்கள் லிஸ்ட்டில் ஷங்கர், கே.வி.ஆனந்த் பெயர்களும் அடிபடுகிறது. ஷங்கர் தற்போது விக்ரம் நடிக்கும் ஐ படத்தையும், கே.வி.ஆனந்த் தனுஷ் நடிக்கும் அநேகன் என்ற படத்தையும் இயக்கி வருகின்றனர்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments