விமர்சனம் » இவன் வேற மாதிரி!!!

19th of December 2013
சென்னை::பெரும் சினிமா பின்னணி கொண்ட விக்ரம் பிரபுவின் இரண்டாவது படம்.., "எங்கேயும் எப்போதும் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் எம். சரவணனின் இரண்டாவது படம்.. என ஏகப்பட்ட "இரண்டாவது.. எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்தாலும் இந்த வாரத்திலும், இன்னும் சில வாரங்களிலும் முதல் இடத்தைப் பெற "முத்தாய்ப்பாய் வந்திருக்கும் திரைப்படம் தான் "இவன் வேற மாதிரி.

கதைப்படி சென்னை சட்டக்கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் போலீஸ் கண் எதிரே அவர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க நடந்தேறிய கொலை வெறி மாணவர் அடிதடி தான் "இவன் வேற மாதிரி படத்திற்கான அடி நாதம்! அந்த வன்முறை சம்பவத்தில் வெகுண்டெழும் விக்ரம் பிரபு, அந்த அடிதடிக்கு காரணமான பதவி வெறிபிடித்த சட்ட அமைச்சர் உள்ளிட்ட சகலமானவர்களையும் புரட்டி எடுத்து சட்டத்தின் முன் நிறுத்துவதும், சாட்சியே இல்லாமல் கொல்வதும் தான் இவன் வேற மாதிரி படத்தின் மொத்த கதையும்!

இத்தனைக்கும் விக்ரம் பிரபு, சம்பந்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவரா என்று கேட்டால் அதுதான் இல்லை. அப்புறம் பின்னே..?! அவர் "விஸ்காம் முடித்து சின்ன சின்ன போட்டோ கிராபி வேலைகள் செய்யும் புகைப்பட கலைஞர். அவருக்கு சட்டக்கல்லூரி அடிதடியில் ஆக்ரோஷம் பீறிடுவதற்கான காரணம் என்ன? எனும் கதையுடன், கதாநாயகி சுரபி, விக்ரம் பிரபுவின் காதலையும் (அப்போ நாயகி சுரபி சட்டக்கல்லூரி மாணவியாக்கும்... என நீங்கள் நினைத்தால்... அதுவும் இல்லை..என்பது தான் ஸ்கிரீன்பிளே மேஜிக்!) கலந்து கட்டி கலர்புல்லாக அதே நேரம் லவ், ஆக்ஷன், சென்டிமென்ட் திரில்லராக இவன் வேற மாதிரி திரைப்படத்தை புதுமாதிரியாக தந்திருக்கிறார் இயக்குநர் எம். சரவணன். அதற்காக அவருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆக வேண்டும்!

இயக்குநர் எம். சரவணனின் எதிர்பார்ப்பை அவர் கற்பனையில் உருவாக்கிய குணா "அலைஸ் குணசேகரன் பாத்திரமாகவே மாறி நடித்து, அடித்து உடைத்து தூள் பரத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. "கும்கியில் ஒரு மாதிரி விக்ம் பிரபு என்றால் இதில் "வேற மாதிரி விக்ரம்! பிரபு (இளைய திலகத்தை சொன்னோம்..!) கவலையை விடுங்கள் குட்டி 16 அடி அல்ல தாத்தா நடிகர் திலகத்திற்கும் சேர்த்து 64 அடி பாயும்!

புதுமுகம் சுரபி டில்லி பொண்ணாம்! செவத்த சேலத்து பக்கம் பொண்ணு மாதிரி மாலினியாகவே மாறி நடிப்பில் பொளந்து கட்டியிருக்கிறார். அதுவும் விக்ரம் பிரபு தந்த மீன்களும் தொட்டியும் கையுமாக முன்பாதியில் கடும் காதல் தவம் புரியும் அம்மணி, பின் பாதியில் தன் காதலன் ஒரு நல்ல விஷயத்திற்காக அமைச்சர் தம்பி அண்ட் கோவினரை அடித்து, அடைத்து உதைத்திருக்கிறார் என தெரிந்ததும் அதை காட்டிக்கொள்ளாமல் விக்ரமை தொடர்ந்து காதலித்து வில்லனின் கைகளில் சிக்கி உண்மையை சொல்ல மறுத்து திருஷ்டி பொம்மையாகும் இடங்கள் கண்ணீர் இல்லாதோர் கண்களையும் கரைத்து விடும்!.

அரவிந்தன் ஐ.பி.எஸ்., ஆக கணேஷ் வெங்கட்ராமன், சட்டத்துக்கு புறம்பான சட்ட அமைச்சராக வள்ளி ஹரிராஜன், அவரது தம்பியாக வம்சி கிருஷ்ணா, அம்மா சார்மிளா, புதிய அப்பாக்கள், நாயகியின் புதுமுக தங்கை எல்லோரும் பாத்திரமறிந்து பளீச்சிட்டிருக்கிறார்கள்.

சி. சத்யாவின் இசையில் லவ்வுல... லவ்வுல விழுந்துட்டேன்... என்னை மறந்தேன் இது தான் உள்ளிட்ட ஆறு பாடல்களும் எங்கேயும் எப்போதும் பட சாயலிலேயே இருந்தாலும் அதுவும் இவன் வேற மாதிரி படத்துக்கு ப்ளஸ் தான்! சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் சக்தி கூட்டுகிறது. சண்டை பயிற்சியாளர் ராஜசேகரின் அதிரடியும் அசத்தம்!

நாயகி சுரபியை காணோம் என போலீஸ் ஸ்டேஷன் வரும் இரு வீட்டு பெற்றோரிடமும், போலீசார் இந்த காதலன் இல்லாமல் பொண்ணுக்கு வேறு காதலர் யாரும் உண்டா? எனக் கேட்டு விட்டு, இப்படி கேட்கறதால எங்களை மாதிரி போலீஸை தப்பா நினைக்காதீங்க... உங்க பொண்ணை பத்தி உங்களுக்கு நல்ல அபிப்ராயம் தான் இருக்கும். ஆனா அந்தப் பொண்ணை தேட இதுமாதிரி டீடெயில் எல்லாம் உதவியா இருக்கும் எனும் வசனத்தில் ஆகட்டும், விக்ரம் பிரபு - சுரபி வீட்டினர் இவர்கள் காதல் தெரிந்து முதன் முதலில் சந்திக்கும் காட்சியில், இவர் வீட்டினருக்கு அவரும், அவர் வீட்டினருக்கு இவரும் குடிக்க ஏதோ பானம் எடுத்து செல்லுகின்ற காட்சியில் ஆகட்டும் புரட்சி படைத்திருக்கிறார் இயக்குநர்.

அதேநேரம் முன்பாதியில் தெரியும் சற்றே குறைவான வேகம், வாட்ச் மேன் கொலையை தாமதமாக துப்பு துலக்குவது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும்
"இவன் வேற மாதிரி - ரொம்ப புது மாதிரி.!
tamil matrimony_HOME_468x60.gif

Comments