ராஜாவின் காலத்து ரசனை மாறிவிட்டதா... மாற்றப்படுகிறதா?!!!

19th of December 2013
சென்னை::தமிழர்களின் உயர்வான நாகரிகத்தில் இசைக்கும், பாடலுக்கும் முக்கிய இடமுண்டு. மனம் அளவற்ற கொந்தளிப்பில் இருக்கும்போது அதை அமைதிப்படுத்த இசை மற்றும் பாடல்களை பயன்படுத்தியது தமிழர் வரலாறு.

மன்னன் சீற்றத்தில் இருந்தால் அவனை சாந்தப்படுத்த பாணன் யாழிசையை மீட்டுவான். யாழிசையின் நாதம் மன்னனின் மனதை தென்றலாக வருடி அவனை சாந்தப்படுத்தும். மனம் சாந்தப்படும்போது துன்பம் அகன்று இன்பம் ஏற்படும். இந்த இன்பம் மன்னனுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்ல வாழ்வைத் தரும். இப்படிப்பட்ட உயர்வான சேவை செய்யும் பாணனே இங்கு இறைவனாக கருதப்படுவான்.

ஒருவன் துன்பம் அடையும்போது மற்றொருவனுக்கு தீங்கு விளைவிக்க முயல்வது மனித இயல்பு. ஆனால் தன் துன்பத்திற்காக மற்றொருவனுக்கு தீங்கு விளைவிக்காமல் தடுக்க முற்படுவதே தெய்வீகம். அத்தெய்வீக சக்தியை கொடுப்பது இசையும், பாடலும்.

அத்தெய்வீக சக்தியை பெற்று, தமிழர்களின் உயர்வான நாகரிகத்தை பறைசாற்றும் விதமாக, காலத்தால் அழியாத பொன்னோவியமாக இசைஞானி இளையராஜா விளங்குகிறார் என்பது முற்றிலும் உண்மை.

கருவைச் சுமக்கும் தாய் தெய்வம். அந்தத் தாய் தன்னுடைய துன்பங்களை எல்லாம் தாங்கிக்கொண்டு குழந்தையை பொக்கிஷமாக பாதுகாத்து பெற்றெடுக்கிறாள். தன்னுடைய துன்பத்திற்காக அவள் குழந்தைக்கு தீங்கிழைக்கவில்லை; தீங்கிழைக்கவும் மாட்டாள்.

தாய் தன் குழந்தையைப் பார்த்து "அழகிய கண்ணே... உறவுகள் நீயே..." என்று பாடும் தாய்ப்பாசத்தின் உண்மையை தன் இசையின் மூலம் உலகிற்கு உணர்த்திய உன்னத கலைஞன் இளையராஜா.

அத்தகைய அன்பான தாய்க்கு "ஆராரிரோ பாடியதாரோ...தூங்கிப்போனதாரோ" என்ற பாடலில் தன் பாசவுணர்வை திருப்பித்தரும் மகனின் உணர்வை, தன் சோகமயமான இசையின் மூலம், தாயிருந்தால் எத்துன்பத்தையும் தாங்க முடியும்... ஆனால் அந்தத் தாயே இல்லையென்றால் அளவிடப்பட முடியாத துன்பம் ஏற்படும்... என்று தாய்ப்பாசத்தின் உச்சத்தை வெளிக்கொண்டு வந்தவர் இளையராஜா.

இந்த நூற்றாண்டின் அழகிய இசை வடிவமாக "என்னை தாலாட்ட வருவாளா... நெஞ்சில் பூமஞ்சம் தருவாளா...." என்ற பாடலின் இசையில், காதலியுடனான காதலனின் மனக்காதல் அலைகளை மோதவிட்டு ரசிக்க வைத்தவர் ராஜா.

"அக்கம் பக்கம் பாரடா சின்னராசா.... ஆகாச பார்வை என்ன சொல்லு ராசா..." என்ற பாடலின் இசையில் சமூகத்தில் நடக்கும் அவலங்களை புரிந்து கொண்டு சமூகத்தை சீர்திருத்த அனைவரும் முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியவர் ராஜா.

"பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே...என் ஐயனே..." என்ற பாடலின் இசையில் மனித வாழ்க்கையின் முழுமையான அர்த்தத்தையே கண் முன் கொண்டு வந்து நிறுத்தியவர் இளையராஜா.

ஆக தாய், மகன், காதல், சமூகம், மனித வாழ்க்கை மற்றும் இறை ஆகியவற்றை அனைவரும் எப்படி அணுகவேண்டும் என்று தனது இசையால் புரியவைத்த ஒற்றை மனிதன் இளையராஜா.

திரைத்துறை வரலாற்றில் "பின்னணி இசையால் காட்சியின் நிஜ முகத்தை கண் முன் நிறுத்தியவர்"  இசை மேதை இளையராஜா என்றால் அது சற்றும் மிகையல்ல.

இசை என்ற சக்தியால் மனித இனத்தை அமைதிப்படுத்தியவர், நெறிப்படுத்தியவர் இளையராஜா. ஆனால் இன்றைய இசையமைப்பாளர்கள் வருமானத்திற்காக நமது கலாச்சாரத்தை சீரழிக்க என்னென்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்து வருகின்றனர் என்பது உண்மை. ஆனால் இந்த உண்மையை மறைத்து ராஜா காலத்து ரசனை மாறிவிட்டது என்று கூறுவது ஏற்க முடியாத ஒன்றாகும்.

முடிந்தால் தங்கள் திறமைகளை, கருவிகளை பயன்படுத்தி பாசம், காதல், சமூகம், மனித வாழ்க்கை மற்றும் இறை ஆகியவற்றை புதிய முறையில் எப்படி அணுகலாம் என முயற்சிக்கவேண்டும்.

இதுவே இசையமைப்பாளனின் நோக்கமாக இருக்கவேண்டும். வெறும் வருமானம் மட்டும் முக்கியமென்றால் எனக்கு சமூகத்தைப் பற்றி அக்கறையில்லை என வெளிப்படையாக கூறவேண்டும். அதை விட்டு ரசனை மாறிவிட்டதென்று மற்றவர்கள் மேல் பழிபோடக்கூடாது.

தாய் எப்படி தன் குழந்தைக்கு தீங்கிழைக்கமாட்டாளோ அதைப்போல சமூகம் என்ற குழந்தைக்கு தாயாக விளங்கும் இசையமைப்பாளர்களும் சமூகத்திற்கு தீங்கிழைக்க முற்படக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. 
tamil matrimony_HOME_468x60.gif

Comments