ஜித்தன்-2 படத்துக்காக சந்தானத்துடன் கைகோர்க்கிறார் ஜித்தன் ரமேஷ்!!!


1st of December 2013
சென்னை::தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் இரண்டு மகன்கள் ஒருவர் ஜீவா, இன்னொருவர் ரமேஷ். இதில் ரமேஷ் வின்சென்ட் செல்வா இயக்கிய ஜித்தன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானர். அப்படம் வெற்றி பெற்றதால் ஜெயம் படத்திற்கு பிறகு அப்பட நாயகன் ரவியின் பெயருக்கு முன்னால் ஜெயம் ஒட்டிக்கொண்டதைப்போன்று, இப்படத்திற்கு பிறகு ரமேஷின் பெயருக்கு முன்னால் ஜித்தன் ஒட்டிக்கொண்டது. அதனால் ஜித்தன் ரமேஷ் என்ற பெயரில் தொடர்ந்து நடித்து வந்தார் அவர்.

ஆனால் அதன்பிறகு அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. கடைசியாக நாயகனாக நடித்த பிள்ளையார் கோயில் தெரு கடைசி வீடு படமும் ப்ளாப் ஆனதைத் தொடர்ந்து, சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் அவருக்கு தம்பியாகவும் நடித்தார். ஆனால், மறுபடியும் ஹீரோவாகி விட வேண்டும் என்பதால் பின்னர் கேரக்டர் ரோல்களை தவிர்த்து வந்த ஜித்தன் ரமேஷ், இப்போது தனது முதல் படமான ஜித்தன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க்கிறார். அவரது தந்தையான ஆர்.பி.செளத்ரியே படத்தை தயாரிக்கிறாராம்.

மேலும், இப்படத்தை எப்படியேனும் ஹிட் பண்ணி தனக்கென்று ஒரு மார்க்கெட்டை பிடித்து விட வேண்டும் என்பதற்காக சந்தானத்துடன் கைகோர்த்துள்ள ஜித்தன் ரமேஷ், முந்தைய படத்தை விடவும் ஆக்சன், காமெடி களைகட்ட வேண்டும் என்று டைரக்டர் வின்சென்ட் செல்வாவிடம் சொல்ல, சமீபத்தில் ஹிட் படங்களை கருத்தில் கொண்டு ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கிறாராம்.

அதோடு, பிரபல ஹீரோயினிகள் தற்போதைக்கு ஜித்தன் ரமேசுடன் நடிக்க தயங்குவார்கள் என்பதால், சுவிஸ்டா என்றொரு புதுமுகத்தை அவருக்கு ஜோடியாக்கியிருககிறார்களாம். ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டவர்கள், தற்போது தாங்கள் தயாரித்து வெளியாகவுள்ள விஜய்யின் ஜில்லா பட வேலைகள் முடிந்ததும், ஜித்தன்-2வின் அடுத்த கட்ட வேலைகளில் இறங்குகிறார்களாம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments