முதல்நாளே 25 கோடி வசூலை அள்ளிய ஹிரித்திக் ரோஷனின் கிரிஷ்- 3!!!

4th of November 2013
சென்னை::ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷனின் நடிப்பிலும், ராகேஷ் ரோஷனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் வெளிவந்துள்ள 'கிரிஷ்-3' ஒரு சூப்பர் ஹீரோ அறிவியல் படமாகும். இந்தப் படம்' கோயி மில் கயா', 'கிரிஷ்' படங்களின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களும் ஹிந்தித் திரையுலகில் வசூலை வாரிக்குவித்த படங்களாகும்.

'கிரிஷ்-3' படத்தை 3-டி தொழில்நுட்பத்துடன் இந்த மாதம் 4-ம்தேதி வெளியிடப்போவதாக அதன் தயாரிப்புத்தரப்பில் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், நேரமின்மை காரணமாக இதன் தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன் இந்த மாதம் ஒன்றாம் தேதியே இப்படத்தை 2-டி தொழில்நுட்பத்துடனே திரையிட்டார்.

ஹிரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் மற்றும் விவேக் ஒபராய் நடித்து வெளிவந்துள்ள இந்தப் படம் முதல் நாளே நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. வெளியிடப்பட்ட அனைத்து இடங்களிலும் 85 முதல் 100 சதவிகிதமும் அரங்கு நிறைந்த காட்சிகளாக இந்தப் படம் ஓடியுள்ளது.

திரைப்பட விமர்சகரான தரன் ஆதர்ஷ் இந்தப் படத்தை ஒரு சூறாவளி என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பைப் பற்றி ஹிரித்திக் ரோஷன் தனது இணையதளத் தகவலில் குறிப்பிட்டுள்ளார். தீபாவளிக்கு முதல் நாள் இந்தப் படம் வெளியானது. அன்று விடுமுறை தினமாக இல்லாதபோதிலும் 25.5 கோடி வசூலாகியுள்ளது என்று தெரிவித்துள்ள ஹிரித்திக் ரோஷன் ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் திரையிடப்பட்ட இடங்களிலும் இந்தப் படத்திற்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

tamil matrimony_HOME_468x60.gif
 

Comments