விழா: இழவு வீட்டில் நடக்கும் காதலை மையமாகக் கொண்ட படம்!!!

28th of October 2013
சென்னை::ஜெ.பி. மீடியா டிரீம்ஸ் பிலிம் புரொடக்ஷன் அதிபர்களான கே.ஜி. ஜெயவேல் - ஜெ. பாலமுருகன் இருவரின் நிர்வாக தயாரிப்பிலும அசூர் எண்டர்டெயின்ட்மெண்ட் உரிமையாளர் சுனிர் கேடர்பாலும், 126 படங்களை இயக்கி சாதனை புரிந்துள்ள இராம.நாராயணன் தனது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் இணைந்து தயாரித்துள்ள படம் 'விழா'.
இழவு வீட்டில் நடக்கும் காதலை மையமாகக் கொண்ட படம் இது. படத்தின் நாயகன் மகேந்திரேன் ‘பறை’ வாசிப்பவர், நாயகி மாளவிகா மேனன் ‘ஒப்பாரி’ பாடல் பாடுபவர். மதுரை பக்கத்து கிராமப் பின்னணியில் இழவு வீடுகளில் இவர்கள் சந்தித்துக் கொள்ளும் போது ஏற்படும் காதலை மிகவும் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்களாம்.

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மகேந்திரன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மாளவிகா மேனன் அறிமுகமாகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இவர்களுடன், காதல் தண்டபாணி, தேனி முருகன், காளி, கல்லூரி வினோத், கல்லூரி கோபால், ஸ்மைல் செல்வா, பிள்ளையார் பட்டி ஜெயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இவை தவிர திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி பகுதிகளில் உள்ள மக்களும் இதில் நடித்துள்ளார்களாம்.

ஜேம்ஸ் வசந்தன் இசையில் ‘சுப்பிரமணியபுரம்’ படத்திற்குப் பிறகு மதுரையின் மண் மனம் வீசும் பாடலகள் இடம் பெற்றுள்ளன. இப்படத்தை பாரதி பாலகுமாரன் இயக்கியுள்ளார். ‘நாளை இயக்குனர்’ நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாலசந்தர், கமல்ஹாசன் இருவரது பாராட்டுக்களையும் பெற்ற குறும்படமான இப்படத்தை வெள்ளித் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ‘விழா’ நவம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

Comments