ஜன்னல் ஓரம்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு ஆச்சர்ய சம்பவங்கள்!!!

18th of October 2013
சென்னை::ரஜினிகாந்த்துக்குப் பிறகு மக்கள் குடும்பத்தோட பார்க்கற படம் சூர்யாவோட படம்தான் என்று இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

ஜன்னல் ஓரம்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு ஆச்சர்ய சம்பவங்கள் அரங்கேறின. அதில் ஒன்று, அடுத்த வருடம் கௌதம் மேனன் படத்தில் நடிப்பேன் என்று சூர்யா சூசகமாக கூறியது, மற்றொன்று ‘பருத்தி வீரன்’ பட பிரச்னையால் பிரிந்திருந்த இயக்குனர் அமீரும், சூர்யாவும் அருகருகே அமர்ந்தது. அதோடு நில்லாமல் விழா மேடையில் அமீர், சூர்யாவை புகழ்ந்து தள்ளிவிட்டார். இது விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

விழாவில் அமீர் பேசியதாவது., “இன்று நான் இந்த விழாவில் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நடிகர் சூர்யா தான். அவர் தான் என்னை இயக்குனரா நம்பி முதன் முதலாக இயக்க வாய்ப்பு கொடுத்தார்.

12 வருடங்களுக்குப் பிறகு அதை இப்போது ஏன் இந்த மேடையில் சொல்கிறேன் என்றால், ‘மௌனம் பேசியதே’ படத்திற்குப் பிறகு நாங்கள் இது மாதிரி மேடைகளில் சந்தித்ததேயில்லை என்பது தான் உண்மை! எங்களுக்குள் வழக்கமான சந்திப்போ, பேச்சோ எப்போதுமே இருந்தது கிடையாது. அவர் நடித்த ‘நந்தா’ பட ரிலீசுக்குப் பிறகு நாங்கள் ஊர் ஊராக சென்றிருந்தோம்.

தமிழ்நாட்டுல ரஜினிகாந்த் சாருக்கு அப்புறம் மக்கள் குடும்பத்தோட போய் பார்க்கற படம் சூர்யாவோட படம்தான். அதை நானே பார்த்திருக்கிறேன். அதை சூர்யா எந்த அளவுக்கு கவனிச்சிருக்காருன்னு தெரியலை.
ஆனால், அவரு என்னடான்னா ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ன்னு முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்கள்ல நடிச்சிட்டிருக்காரு. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் சூர்யாவை எப்படி பார்க்கிறன்னா அவரை ஒரு ‘அமீர்கான்’ மாதிரி பார்க்கிறேன்.

ஏன்னா, அமீர்கான் பண்ற படங்கள் மாதிரி இங்க சூர்யாவாலதான் பண்ண முடியும். அதனால, என்னுடைய முதல் பட கதாநாயகன் கிட்ட, என் நண்பன் கிட்ட நான் கேட்டுக்கிறது என்னன்னா, நீங்க குடும்பக் கதைகள்லயும் நடிக்கணும். இவ்வளவு நான் சொன்னதும், உடனே என் படத்துல அவர் நடிக்கிறாரான்னு கேட்டுடாதீங்க.

அதை மாதிரி படங்கள் பார்க்கிறதுக்கு மக்கள் தயாரா இருக்கிறாங்க. கொடுக்கிறதுக்குத்தான் ஆளில்லை என்றார்...

தமிழில் கதாசிரியர்களுக்கு மதிப்பில்லை : இயக்குனர் தாக்கு!!!

தமிழ் சினிமாவில் கதாசிரியர்களுக்கு மதிப்பில்லை என்றார் இயக்குனர் ஜி.சேகரன். பார்த்திபன் கனவு படத்தை இயக்கிய கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படம் ஜன்னல் ஓரம். பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மனிஷா யாதவ் நடிக்கின்றனர். முருகன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. ஜமீன்கோட்டை, காவல் பூனைகள், குடும்ப சங்கிலி போன்ற படங்களை இயக்கிய கலைப்புலி ஜி.சேகரன் விழாவில் பேசியதாவது:

தமிழ் சினிமாவை காக்கும் பொறுப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இருக்கிறது. தற்போது அதன் தலைவராக தேர்வாகி இருக்கும் கேயார், தயாரிப்பாளர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்புகிறேன். ஜன்னல் ஓரம் படத்தில் 3 ஹீரோக்கள் நடித்திருக்கின்றனர். இது ஆரோக்கியமான சூழல். முன்பெல்லாம் படத்தில் இயக்குனர்கள், நடிகர்கள் பெயர்களுக்கு இணையாக கதாசிரியர், எழுத்தாளர்கள் பெயரும் போடப்பட்டு வந்தது. இப்போது அந்த நிலையை காண முடியவில்லை. மலையாள திரையுலகில் இன்றைக்கும் திரை எழுத்தாளர்களுக்கு மரியாதை இருக்கிறது. மலையாள படமொன்றின் ரீமேக் உரிமையை வாங்க ஹீரோ திலீப்பை சந்திக்க சென்றோம். அது இரவு நேரம். அந்த நேரத்திலும் அப்படத்தின் கதை, திரைக்கதை ஆசிரியர் உடனிருந்தனர். அவர்கள் முன்னிலையில்தான் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தளவுக்கு எழுத்தாளர்களுக்கு அங்கு இன்றைக்கும் மரியாதை இருக்கிறது. அந்த நிலை தமிழ் சினிமாவில் இல்லை.  இவ்வாறு ஜி.சேகரன் பேசினார். விழாவில் நடிகர்கள் சூர்யா, விஷால், இயக்குனர்கள் அமீர், சேரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பார்த்திபன் பேசும்போது, இந்த விழாவுக்கு அனைவரையும் வேட்டி கட்டி வரும்படி தயாரிப்பாளர் எங்களிடம் கேட்டார். தயாரிப்பாளருக்காக வேட்டி கட்டி வந்தோம். அதேபோல் இன்று (நேற்று) மாலை வெளியான தமிழ் முரசு பத்திரிகையில், லிங்குசாமிக்காக சூர்யா தாடி வளர்க்கிறார் என்று தலைப்பு வெளியிட்டிருந்தார்கள். (இப்படி கூறியபடி தமிழ்முரசு பத்திரிகையை காட்டினார்). இதன் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு ஹீரோக்கள் எவ்வளவு ஒத்துழைப்பு தருகிறார்கள் என்பது புரியும் என்றார். அப்போது கரவொலி எழுந்தது.

Comments