ரஜினி பாணியை விடாத கார்த்தி!!!

17th of October 2013
சென்னை::நான் மகான் அல்ல என்ற ரஜினி பட டைட்டிலில் நடித்த கார்த்தி அதன்பிறகு மூன்று முகம் படத்தில் ரஜினி நடித்த போலீஸ் கேரக்டரான அலெக்ஸ் பாண்டியன் பெயரிலும் ஒரு படத்தில் நடித்தார். அதோடு சகுனியில், ரஜினி-கமல் என்று இவரும், சந்தானமும் செம அக்கப்போர் செய்தனர்.

இந்த நிலையில், ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திற்கு பிறகு அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் படத்திலும் ரஜினியின் காளி பட டைட்டிலில்தான் நடிப்பதாக இருந்தார் கார்த்தி. ஆனால் திடீரென்று இனி ரஜினி டைட்டில்களை நம்பி நடிக்கப்போவதில்லை. எனக்கேற்ற நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று அறிவித்தார்.

இப்படி கார்த்தி அறிவித்திருக்கும் நிலையில், வருகிற தீபாவளிக்கு அவர் நடிப்பில் வெளியாகும், ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும் 1980களில் ரஜினி படங்களில் இடம்பெறுவது போன்ற சாயலில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளதாம். அந்த காலத்து ரஜினியின் நடை, உடை, நடனம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த பாடலில் ஆடியிருக்கிறாராம் கார்த்தி.

அந்த பாடலுக்கு ரஜினி பாணியில் நடித்தால்தான் ரீச் ஆகும் என்பதால் அவர் போன்று நடனமாடியிருக்கிறேன் என்று கூறியுள்ள கார்த்தி, இந்த பாடலில் அதிக ஈடுபாட்டுடன் நடித்தேன். இது என்னை ஈர்த்தது போன்று ரசிகர்களையும் கட்டாயம் ஈர்க்கும் என்கிறார் கார்த்தி.

Comments