ஆர்யா, நயன்தாரா நடித்த ‘ராஜாராணி‘ படத்துக்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!!!

26th of September 2013
சென்னை::ஆர்யா, நயன்தாரா நடித்த ‘ராஜாராணி‘ படத்துக்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தி.நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நடிகை நயன்தாரா, நடிகர் ஆர்யா நடித்த படம் ‘ராஜாராணி‘. இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார். இந்த படம் நாளை தமிழகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.

ஏனென்றால் நாங்கள் அரவாணிகளின் வாழ்க்கையை சித்தரிக்கும் ராஜாராணி என்ற பெயரில் குறும்படம் தயாரித்து, அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி உள்ளோம். இதற்கு தமிழக அரசிடம் மானியம் கேட்டு உள்ளோம். இந்த பெயரை நாங்கள் ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய் துள் ளோம். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதி சுதாகர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏ.ஆர்.முருகதாஸ் சார்பாக மூத்த வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி,
இந்த வழக்கில் தடை விதிக்கக்கூடாது. ஒரு படத்தின் கதையை காப்பியடித்தால்தான், ‘காப்பிரைட்‘ சட்டம் பொருந்தும். மனுதாரருடைய படம் குறும்படம். நாங்கள் தயாரித்த படம் நீளமான படம். எனவே, இந்த படத்துக்கு எந்த தடையும் விதிக்கக்கூடாது“ என்றார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு,  ‘ராஜாராணி‘ படத்துக்கு தடைவிதிக்க முடியாது. ஏனென் றால் ‘காப்பிரைட்‘ சட்டம் பெயர் பதிவுக்கு பொருந் தாது“ என்று உத்தரவிட்டார்.

Comments