உலக சினிமாவில் சொல்லப்படாத விஷயத்தை சொல்லியிருக்கிறேன் - விஜய மனோஜ் பெருமிதம்!!!

3rd of September 2013
சென்னை::தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் மனோஜ்குமார், தற்போது தனது பெயரை விஜய மனோஜ் என்று மாற்றிக்கொண்டு, இயக்கும் படம்
உயிருக்கு உயிராக'. இப்படத்தில் சஞ்சீவ், சரண் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க, நந்தனா, பிரீத்தி தாஸ் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் வரும் முக்கியமான கவர்னர் கதாபாத்திரத்தில்  ரங்கபாஷ்யம் நடித்திருக்கிறார்.

பல வெள்ளி விழாப் படங்களை கொடுத்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில் கோவைத்தம்பி, வேந்தர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கை முன்னேற்றம் ஆகியவற்றில் மட்டும் பொறுப்பெடுத்துக் கொள்ளும் பெற்றொர்கள், அவர்கள் காதலில் சிக்கி தவிக்கும் போதும், அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் விஜய மனோஜ்குமார், இப்படத்தில் உலக நாடுகளுக்கு தேவையான ஒரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறாராம்.

இது குறித்து கூறிய இயக்குநர் விஜய மனோஜ்குமார், "பாரதிராஜாவிடம்  உதவியாளராக இருந்த எனக்கு, 1987 இல் எனது முதலாவது படமான 'மண்ணுக்குள் வைரம்' இயக்க வாய்ப்பளித்தார் கோவைத்தம்பி. இந்த விஜய வருடத்தில் எனது பெயருடன் விஜய சேர்த்து, விஜய மனோஜ்குமாராக எனது 25 ஆவது படமாக உயிருக்கு உயிராக படத்தை இயக்கும் வாய்ப்பினையும்  அளித்திருக்கிறார்.

தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியும் நல்ல வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கும் பெற்றோர்களே, தங்களது குழந்தைகள்  படிக்கும் காலத்தில் காதல் வயப்பட்டுத் தடம்மாறும் வேளைகளில் ஆறுதலாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும், இந்தப் படத்தில் அப்படி ஒரு பொறுப்பான தந்தையாக பிரபு நடித்திருக்கிறார்.

படத்தில் காதல், நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியுடன் கிளைமாக்ஸில் புதிதாக ஒன்றைச் சொல்லியிருக்கிறேன். நமது மாணவர்களின் மூளை எவ்வளவு மகத்தானது என்று சொல்லும் விதமாக அது இருக்கும். இந்தப் படத்தில் ஒரு ஹீரோ ஏரோநாட்டிகல் இன்ஜினியர். இன்னொரு ஹீரோ கம்ப்யூட்டர் இன்ஜினியர். எதிர்காலத்தில் போர்கள் தரையில் நடைபெறப் போவதில்லை. அவை வான்வெளியில் தான் நடைபெறும். அப்படிப்பட்ட அபாயகரமான போர்களின் போது நமது இராணுவத்திற்குப் பெரிதும் பயன்படும் தீர்வினை இந்த  மாணவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

படம் வந்தபிறகு நிச்சயம் அந்த விஷயம் உங்களை பிரமிக்க வைக்கும். என்  வயது என்ன என்று எல்லோரும் கேட்பார்கள். அந்த அளவிற்கு இளமையாகவும் புதுமையாகவும் கிளைமாக்ஸினை அமைத்திருக்கிறேன். இந்த நகரமே, இந்த மாநிலமே ஏன் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் அளவிற்கு அது இருக்கும்" என்றார்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளர் ஆனந்த்குமார் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். கவிஞர் நந்தலாலா, சினேகன் மற்றும் இயக்குநர் விஜய் மனோஜ்குமார் ஆகியோர் தலா இரண்டு பாடல்களை எழுத, சாந்தகுமார் என்ற புதுமுக இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

Comments