புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், வண்ணாரப்பேட்டையே கலங்கும் - டிரம்ஸ் சிவமணி!!!

26th of August 2013
சென்னை::சென்னையை பூர்வீமாக கொண்டவர் டிரம்ஸ் சிவமணி. 7வயதில் சிவமணிக்கு டிரம்ஸ் மீது ஏற்பட்ட ஆர்வம் 11 வயதிலேயே இசைத்துறையில் கால் பதிக்க வைத்தது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசை ஜாம்பவான்களின் படங்களுக்கு டிரம்ஸ் கலைஞராக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் அநேக படங்களுக்கும், பல்வேறு ஆல்பங்களுக்கும் இவர் டிரம்ஸ் வாசிப்பாளர். தற்போது இசையமைப்பாளராக மாறியிருக்கும் சிவமணி தனது இசை பயணங்களின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். இதோ...

* உங்களுக்கு எப்படி இசை ஆர்வம் வந்தது?

கே.வி.மகாதேவன் ஆர்கெஸ்ட்ராவில் என் அப்பா எஸ்.எம்.ஆனந்தன் டிரம்மராக இருந்தார். அவர் தான், கீ போர்டு, ஆர்மோனியம் என, எல்லா வகையான இசைக் கருவிகளையும் வாசிக்க கற்றுக் கொடுத்தார். ஆனாலும், எனக்கு டிரம்ஸ் மீது தான் அதிக ஆர்வம். அப்போது கத்துகிட்ட ஆர்மோனிய பயிற்சி தான்,  இப்போ நான் இசையமைக்க பல வகையிலும் உதவுது. அப்பாவுக்கு தான் நன்றி சொல்லணும்.

* உங்க ஏரியாவில், பெரிய ஆளா கலக்கிட்டு இருந்தீங்களாமே?

இப்பவும் கலக்கிட்டு தான், இருக்கேன், நான், பேசின் பிரிட்ஜ் பகுதியில் வளர்ந்தவன். எங்க ஏரியாவில்,  அப்பவே ரிதம்ஸ் ஜாஸ்தி. ரயில் போகும் சவுண்டே, எங்களுக்கு ரிதம் தான்.
எங்க ஏரியாவில் தான், பெரிய சுடுகாடே இருக்கு. மின்ட் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு, உடல்களை  அடக்கம் செய்வதற்காக வரும்போது, மோளம் அடிப்பாங்களே, அந்த இசை என்னுள்ளே ஏறிடுச்சி. எங்க ஏரியாவில். எனக்கு எப்போது, மூடு வந்தாலும், 6 மணி நேரம் பயிற்சி எடுப்பேன். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், என் இசைக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். ஏரியாவே, சும்மா கலங்கும். இதுவரை சண்டை சச்சரவுனு வந்தது இல்லை.

* உங்க முதல் கச்சேரி எப்போது நடந்தது?

என்னுடைய 11 வது வயதில், புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை பகுதிகளில், மாட்டு வண்டியை மேடையாக்கி, ஆடி மாத நிகழ்ச்சிகளில் தான், முதல் முதலா வாசிக்க  ஆரம்பிச்சேன். ஏரியாவே ஆடிப் போயிடுச்சு. அப்போ ஆரம்பிச்சி, இப்போ வரை, அந்த சவுண்டு நிக்கலை.

* படங்களில் வாசித்த அனுபவம்?

என் இசை வாழ்க்கையை ஆரம்பிச்சதே கே.வி.மகாதேவன் சார் தான். அப்புறம், ராஜா சார், எம்.எஸ்.வி., சார். மலையாளத்தில, உமர், ஜாய், அர்ஜுன் மாஸ்டர், தியாகராஜன் மாஸ்டர் எல்லாருக்கும் வாசிச்சேன். அதிகமான வாய்ப்புகள் வந்ததால், 10ம் வகுப்புக்கு மேல், படிக்க முடியவில்லை. முழு மூச்சா டிரம்சில் இறங்கிட்டேன்.

* மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளீர்களாமே?

அதுக்கு ரகுமானுக்கு  தான் நன்றி சொல்லணும். பரத்பாலா  தயாரிப்பில், "ரகுமான் - மைக்கேல் ஜாக்சன் அண்ட் பிரண்ட்ஸ்  என்ற ஆல்பத்துக்காக, அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை மறக்கவே முடியாது.

* சின்ன வயதில், சென்னையில் காத்தாடி விடுவதில் நீங்க பெரிய தலையாமே?

அய்யய்யோ, எப்படி அதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சது?  எனக்கு காத்தாடின்னா உயிர். எங்க ஏரியாவில், ஒரு தல இருந்தாரு;  அவர் காத்தாடி விடுறதில் கில்லாடி. ஒருமுறை,அவர் காத்தாடியை, நாங்க வெட்டி விட்டுட்டோம். அப்போது, அது பெரிய ஆச்சரியம். அந்த சம்பவத்துக்கு பின், எங்க ஏரியாவில், என்னை எல்லாரும் தலயாவே பார்த்தாங்க.

Comments