தமிழ் படங்களை இயக்குவதற்கு நேரம் கிடைக்கவில்லை: பிரபுதேவா!!!

13th of August 2013
சென்னை::1."களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்த அனுபவம் பற்றி?
மறக்க முடியாத இனிமையான அனுபவம்.  தங்கர் பச்சான் இயக்கத்தில், நான் நடிக்கப் போகிறேன் என்றதும், அவருக்கும், உங்களுக்கும் ஒத்துப் போகுமா? என்று சிலர் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால், ஸ்பாட்டுக்கு  சென்றபோது ஒருவரையொருவர் புரிந்து, விட்டுக் கொடுத்து பழகினோம். விளைவு,  இப்போது என் சினிமா நண்பர்களுள் முக்கியமானவராகி விட்டார் தங்கர்.

2.இந்த படத்தில் உங்கள் கேரக்டர் என்ன?
இதுவரை நான் நடிக்காத, உணர்ச்சிகரமான கேரக்டர். படத்தின் கதையை படித்தபோது, இது வேறு பாணியாக உள்ளதே, நமக்கு செட்டாகுமா என்று பயந்தேன். ஆனால், இயக்குனர், என்னை பொற்செழியன் என்ற,  அந்த கதாபாத்திரமாகவே மாற்றி விட்டார். அதனால், இப்படத்தில் என் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தால், அது என்னை சாராது. முழுக்க முழுக்க, இயக்குனரையே சாரும்.

3.சமீபகாலமாக, தமிழில் படம் இயக்குவது இல்லையே ஏன்?
இந்தியில் நான் இயக்கும் படங்கள், "ஹிட்டாகி வருவதால், அங்குள்ள முன்னணி ஹீரோக்கள், என் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் தான், தமிழுக்கு வர. நேரம் கிடைக்கவில்லை. இருப்பினும், சந்தர்ப்பம் கிடைக்கும்போது,  தமிழ் படம் இயக்க வருவேன்.

4.தெலுங்கு படங்களை இந்தியில் ரீ-மேக் செய்துள்ள நீங்கள், இந்த படத்தையும், ரீ-மேக் செய்வீர்களா?
தென் மாநிலங்களில் வெற்றி பெற்ற சில படங்களை, இந்தி ரசிகர்களுக்கேற்ப திருத்தங்கள் செய்து, "ஹிட் கொடுத்துள்ளேன். அதனால், தங்கர் பச்சான் சம்மதித்தால், நான் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தையும், கண்டிப்பாக, இந்தியில் ரீ-மேக் செய்வேன்.

5.தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்களை, இந்தியில் நீங்கள் இயக்கும் படங்களில் பயன்படுத்தும் ஐடியா உள்ளதா?
இப்போதும், சில கலைஞர்களை பயன்படுத்தி தான் வருகிறேன். விஜயைகூட ஒரு படத்தில் நடனமாட வைத்தேன். இதேபோல், சூழ்நிலை அமையும்போது தமிழ், தெலுங்கு சினிமாத் துறையினரை பாலிவுட் படங்களில் நடிக்க வைப்பேன்.

Comments