மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் ஜில்லா!!!

4th of July 2013
சென்னை::தலைவா’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் ஜில்லா. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார்.
டி.இமான் இசையமைக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது .இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
 
இவர்களுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், பூர்ணிமா பாக்யராஜும்  முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் மதுரை மற்றும் காரைக்குடி பகுதிகளில் நடந்து முடிந்தது. இதில் விஜய் தவிர்த்து மற்ற நடிகர்கள் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. இங்கு விஜய் மற்றும் மோகன்லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
 
இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் சென்னையில் தொடங்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முறை கிழக்கு கடற்கரை சாலை, சாலிகிராமம், மவுண்ட் ரோடு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த இருக்கின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னையில் படமாக்கி பிறகு வெளிநாடு செல்லவும் திட்டமிட்டிருக்கின்றனராம்.
 
இதுவரை வெளியான விஜய் படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறதாம் 'ஜில்லா' படம். நண்பன், துப்பாக்கி, தலைவா படங்களைப் போல அல்லாமல் ஜில்லாவில் கிராமத்து இளைஞன் வேடம் ஏற்றிருக்கிறார் விஜய். ஜில்லா பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Comments