நான் கமல் இல்லை... ரஜினி மாதிரி! தனுஷ்!!!

2nd of July 2013
சென்னை::ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார் தனுஷ். ‘அம்பிகாபதி’யாக தமிழிலும் வெளியாகும் படத்தின் புரமோஷனுக்காக இந்தியாவின் எல்லா மூலைகளுக்கும் பறந்து கொண்டிருந்தவரை பிடித்துப் பேசினோம். ‘‘இந்திக்கு போயிட்டேன்’’ என்கிற இறுமாப்பு வெளிச்சத்தை படர விட்டுக் கொள்ளாமல், எப்போதும் போல இயல்பாக இருக்கிறார்.

எப்படி இருந்தது இந்திப் பட அனுபவம்?
‘‘ம்.. எனக்கு எதுவும் வித்தியாசமா தெரியல. கஷ்டம்னு சொல்றதா இருந்தா, இந்தி டப்பிங் பேசினதுதான். ரொம்ப சிரமப்பட்டேன். ஆனாலும் ஒரு குழந்தை முதன்முதலா ‘ம்மா... ப்பா...’ன்னு பேச ஆரம்பிச்சு பரவசப்படுறதைப் போல, ஒரு புது மொழியை நான் பேசிப் பழகினது சந்தோஷமான விஷயம்தான். அந்த அனுபவத்தைத் தவிர வேற எதுவும் புதுசா தெரியல. என் பட வரிசையில இது 26வது படம்... அவ்வளவுதான்! முதல் இந்திப் படம் என்ற கணக்கையோ, தனி உழைப்பையோ தரல. லவ்வர் பாய் ஸ்டோரிதான். காசியில ஷூட்டிங் போனப்போ, நம்மூர்ல இருக்கற மாதிரியேதான் இருந்துச்சு. ஸ்கூல் பையனாவும் வர்றேன். முப்பது வயசாகிட்டாலும் மீசை எடுத்துட்டா நமக்குத்தான் சின்னப் பையன் லுக் வந்துடுதே. அது இந்த மாதிரி கேரக்டருக்கு சூப்பரா செட் ஆகுது!’’
‘கொலவெறி’ பாட்டுதான் உங்களை பாலிவுட்டுக்கு கொண்டு போனதா?

‘‘ஒரு லக்ல அமைஞ்ச பாட்டு அது. எல்லாத்துக்கும் அது காரணமா அமைஞ்சிடுமா என்ன? எனக்கு தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த ‘ஆடுகளம்’ படத்தைப் பார்த்துட்டு இயக்குனர் ஆனந்த் எல்.ராய் பேசினார். கதை சொல்ல ஆரம்பிச்ச கால் மணி நேரத்திலேயே, ‘நாம பண்ணலாம் சார்’னு சொன்னேன். அப்படித்தான் இந்த வாய்ப்பு அமைஞ்சது. ‘இனி மும்பையிலேயே செட்டில் ஆகிடுவீங்களா’ன்னு எப்படியும் ஒரு கேள்வி கேட்பீங்க. அந்த மாதிரி எந்த ப்ளானும் இல்ல. நான் தமிழன். தமிழ்ப் படத்தை விட்டுட்டு எங்கேயும் பறக்க மாட்டேன். அதே சமயம், ‘தமிழ்க் கலைஞர்களை பாலிவுட்டில் சரியா மதிக்கறதில்லை’ன்னு உலவுற கருத்துக்கும் பதில் சொல்லிடுறேன். ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’னு எப்படிச் சொல்றாங்களோ, அதே மாதிரிதான் இந்தியிலும் தமிழ் டெக்னீஷியன்களுக்கு நல்ல மரியாதை இருக்கு!’’

சோனம் கபூருடன் கெமிஸ்ட்ரி எப்படி இருந்துச்சு?
‘‘நீங்க எந்த அர்த்தத்தில இப்படி கேட்கறீங்கன்னு தெரியும். நீங்க எதிர்பார்க்கிறபடியே எங்களுக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு. ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அடுத்து ஒரு இந்திப் படத்திலும் நடிக்கிறேன். அதில சோனம் இருப்பாரான்னு தெரியல. ‘அடுத்த படத்தில் நான்தான் உங்களோட நடிப்பேன்’னு சோனம் சொல்றார். அழகான கதாநாயகி யாரா இருந்தாலும் எனக்கு ஓகே. அதைத் தாண்டி கதை ரொம்ப முக்கியம் பாஸ்!’’

டைரக்ஷன் ஆசைக்கு எப்போ தீனி போடப் போறீங்க?
‘‘இதோ பண்ணிடலாம்னு ரெடியாகும்போதெல்லாம், யாராவது வந்து புதுப் படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்திடுறாங்க. இப்படியே ஒவ்வொருமுறையும் தட்டி தட்டிப் போகுது. ஆனா என் கனவு அப்படியே இருக்கு. அடுத்த வருஷம் கண்டிப்பா டைரக்டர் சீட்ல உட்கார்ந்திடுவேன்!’’
ரஜினியின் மருமகனா இருப்பதில் எந்தப் பலனும் இல்லைன்னு சொல்லியிருக்கீங்களே?

‘‘நான் அப்படிச் சொல்லலை. ‘ரஜினியின் மருமகனாக இருப்பதால் எனக்கு எந்தப் பலமும் இல்லை. பலவீனமும் இல்லை. நான் இதுவரைக்கும் 25 படங்கள் பண்ணியிருக்கேன். ஆனால் ரஜினி சாரின் சாதனையோ எல்லை கடந்தது. அவர் ஒரு லெஜண்ட். அவருடன் என்னை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.

நான் இப்படித்தான் சொல்லியிருந்தேன். ஆனால் அது தவறான அர்த்தத்தில் வெளிவந்து விட்டது. இன்னொரு விளக்கத்தையும் சொல்லிடுறேன்... என் நடிப்பில் கமல்ஹாசனின் சாயல் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. ரஜினி சாரின் சாயல் இருப்பதாக வேண்டுமானால் சொல்லலாம். சின்ன வயசிலிருந்து நிறைய ரஜினி படங்களை பார்த்து வளர்ந்ததால் அந்த பாதிப்பு இருக்கலாம்!’’

Comments