சினிமாவைப் போல இசை ஆல்பத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் - வெங்கட் பிரபு!!!

Tuesday,4th of June 2013
சென்னை::சினிமா படங்கள் மற்றும் பாடல்களுக்கு கொடுக்கும் ஆதரவைப் போல இசை ஆல்பங்களுக்கும் மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் அஜீஷ் 'ரெய்ன் காலேஜ் லவ்' என்ற தலைப்பில் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார். அவரே இசையமைத்து பாடியுள்ள இந்த இசை ஆல்பம் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை, எக்ஸ்பிரஸ் அவின்யூவில் பொதுமக்கள் முன்னியிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு இசை ஆல்பத்தை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய வெங்கட் பிரபு, "தமிழில் இசை ஆல்பங்கள் அதிகமாக வெளியிடப்படுவது ஆரோக்கியமான விஷயம். ஹாலிவுட் படங்களில் பாடல்கள் கிடையாது. அங்கு இசை ஆல்பங்களில்தான் பாடல்களை கேட்கலாம். படத்திற்கு பாடல் வேண்டும் என்றால்கூட இசை ஆல்பத்திலிருந்துதான் போட்டுக் கொள்வார்கள். அப்படி ஒரு சூழ்நிலை தமிழ்நாட்டுக்கு வருமா என்று தெரியவில்லை. ஆனால், தமிழில் அவ்வப்போது வரும் இசை ஆல்பங்கல் நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த ஆடியோ சிடிக்களை பணம் கொடுத்து மக்கள் வாங்க வேண்டும். அப்போதுதான் அஜீஷ் போன்ற திறமையாளர்கள் வெளிவர முடியும். சினிமாவைப் போலவே மக்கள் இசை ஆல்பத்துக்கும் ஆதரவு தரவேண்டும்." என்றார்.

இசை ஆல்பம் குறித்து அஜீஷ் கூறுகையில், "எங்கள் குடும்பம் இசை குடும்பம் கிடையாது. எந்த பின்னணியும் இல்லாமல் இந்த நிலையை நான் அடைந்திருக்கிறேன். சிறு வயது முதலே இசை மீது எனக்கு விருப்பம் அதிகம். அதனால், முறைப்படி இசை கற்றுக்கொண்டேன். பள்ளி கல்லூரிகளில் சிறு சிறு பாடல்களை நானே மெட்டு அமைத்து பாடுவேன். சூப்பர் சிங்கர் உள்பட பல போட்டிகளில் முதல் பரிசு பெற்றேன். அதைப் பார்த்து வெங்கட் பிரபு சார் எனக்கு 'கோவா' படத்தில் பாட வாய்ப்புக் கொடுத்தார். இப்போது பல படங்களில் பாடிக்கொண்டிருந்தாலும், தனியாக ஒரு இசை ஆல்பம் உருவாக்க வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாளாக இருந்தது. அதனால்தான் ரெயில் காலேஜ் லவ் என்ற ஆல்பத்தை உருவாக்கினேன்.

இந்த ஆல்பத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. மழை, காதல், கல்லூரி பற்றி தனித்தனி பாடல்கள் மூன்றும் எல்லாவற்றையும் இணைத்து இரண்டு பாடல்களும் இடம் பெற்றுள்ளது. நானே இசை அமைத்து பாடியுள்ளேன். எனது நண்பன் ராகவ் பாடல்களை எழுதியுள்ளார். பாலு தங்கச்சன் சவுண்ட் டிசைனராக பணியாற்றியுள்ளார். அடுத்து நமது தமிழ் கலாச்சாரத்தை மையமாக கொண்ட கிராமிய பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளேன். இசை ஆல்பங்கள் மூலம் என்னை மெருகேற்றிக் கொண்டு குறும்படங்களுக்கு பின்னணி இசை அமைத்து பயிற்சி எடுத்து திரைப்படங்களுக்கு இசை அமைக்க வேண்டும் என்பதே என் லட்சியம். இடையில் சினிமாவில் நடிக்க சில வாய்ப்புகள் வந்தது அதனை மறுத்து விட்டேன். இசையில் சாதிக்க வேண்டும் எனபதே என் லட்சியம்." என்று தெரிவித்தார். (டி.என்.எஸ்)

Comments