என்னோட கல்யாணம் எப்படியெல்லாம் நடக்கணும்னு கலர் கலரா கனவு கண்டு வெச்சிருக்கேன் தெரியுமா? ஸோ,: அகத்தியனின் மகள் விஜயலட்சுமி!!!

Sunday, June 16, 2013
சென்னை::காதலுக்கு கோட்டை’ கட்டிய இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி, ‘ரகசிய கல்யாணம் செய்துகொண்டார். ரஜினியுடன் டப்பிங் பேச மறுத்தார். ‘ரெண்டாவது படம்’ படத்தில் பயங்கர வில்லியாக நடிக்கிறார்’ என்று, அவரைப் பற்றி நிறைய கான்ட்ரவர்ஸிகள். அனைத்து சந்தேகங்களுக்கும் பளிச்… பளிச்சென்று பதில் சொன்னார் விஜயலட்சுமி.

ரஜினி படத்துக்கு டப்பிங் பேச மறுத்துட்டீங்களாமே?

அடடா… இப்படியெல்லாமா வதந்தியை கிளப்புவாங்க? ‘சுல்தான் தி வாரியர்’ படத்தில் அவர் கூட நடிக்க வாய்ப்பு கிடைச்சது, என் பூர்வஜென்ம புண்ணியம். திடீர்னு அந்த புராஜெக்ட் நின்று போனதில், எல்லாரையும் விட எனக்குதான் ரொம்ப வருத்தம். இப்ப அந்த வருத்தம் போயாச்சு. அதை நானே மறந்துட்டேன். மத்தவங்க ஞாபகம் வெச்சுகிட்டு, ஏன் தப்பான நியூஸ் பரப்பறாங்கன்னு தெரியலை. ரஜினி கூட நடிக்க முடியுமா? பேச முடியுமா? அவரை ஒருமுறை நேரில் பார்க்க முடியுமான்னு எத்தனை கோடி பேர் ஏங்கிக்கிட்டு இருக்காங்க. ஆனா, கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாம, என்னைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமான வதந்தியை கிளப்புறாங்களே.

ஒரு இயக்குநரோட மகனை ரகசிய திருமணம் பண்ணிக்கிட்டதா சொல்றாங்களே?

இது, அதைவிட மோசமான நியூஸ். நான் ஏன் ரகசிய கல்யாணம் பண்ணிக்கணும்? என்னோட கல்யாணம் எப்படியெல்லாம் நடக்கணும்னு கலர் கலரா கனவு கண்டு வெச்சிருக்கேன் தெரியுமா? ஸோ, என் கல்யாணம் எப்ப நடந்தாலும், பிரமாண்டமா நடக்கும். நான் எதுக்கு திருட்டு கல்யாணம் பண்ணணும்? எல்லாருக்கும் தெரிஞ்சு பகிரங்கமாதான் நடக்கும். அந்த இயக்குநரோட மகனும், நானும் ஒரே ஜிம்மில் எக்சர்சைஸ் பண்றோம். எப்பவாவது நேரில் பார்த்தா, சின்னதா ‘ஹாய்’ சொல்வோம். அவ்வளவுதான். நான் எப்ப கல்யாணம் பண்ணாலும், முறைப்படி பத்திரிகை அடிச்சு, ஊருக்கும், என் உறவுகளுக்கும் சொல்லித்தான் பண்ணுவேன்.
ரொம்பநாளா ஒருத்தரை காதலிச்சுகிட்டு இருக்கீங்களே! அவரை எப்பதான் கண்ணுல காட்டுவீங்க?

நான் காதலிக்கிறதா யார் சொன்னது? அப்படியே நான் காதலிச்சாலும், அதை எதுக்கு வெளியில் சொல்லணும்? அது என் பெர்சனல். என்னை பொறுத்தவரை, காதல் சீக்ரெட், கல்யாணம் ஓப்பன்!
‘ரெண்டாவது படம்’ படத்தில் வில்லியாமே?

இன்னும் சில வாரத்துல அந்த படம் ரிலீசாகும். அப்ப தெரியும், என் கேரக்டர் என்னன்னு. ஆனா, கண்டிப்பா நான் வில்லி கிடையாது. வில்லியின் சாயல் கூட இருக்காதுன்னு பாருங்களேன். புதுமையான, ரொம்ப ஸ்டைலிஷ் ஆன கேரக்டர்.

தமிழ்ப் பெண்ணா இருப்பதால், சினிமாவில் வாய்ப்பு குறைவா இருக்கிறதா நினைக்கிறீங்களா?

அப்படி எந்த காரணமும் சொல்ல முடியாது. எனக்கு எந்த கேரக்டர் ரொம்ப பொருத்தமா இருக்குமோ, அதை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். ஒரு கேரக்டர் எனக்கு சரிப்பட்டு வராதுன்னு தெரிஞ்சா, உடனே அதை பளிச்சுனு சொல்லிடுவேன். அதுதான் விஜயலட்சுமி. அந்த கண்டிஷன் போடுறாங்க, இந்த கண்டிஷன் போடுறாங்கன்னு, என் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத சிலர் வதந்தி கிளப்பிவிடறாங்க. வருஷத்துக்கு ஒரு படம் நடிச்சாலும், உருப்படியான படத்தில் நடிக்கணும். நாலு பேர் பார்த்து பாராட்டும்படியா இருக்கணும். அதுதான் என் பாலிசி. இப்ப ‘ரெண்டாவது படம்’, ‘வெண்ணிலா வீடு’னு இரண்டிலும் அற்புதமான கேரக்டர் கிடைச்சிருக்கு. இந்த படங்கள் என்னை திரும்பி பார்க்க வைக்கும்.

தெலுங்கு, மலையாள வாய்ப்புகளை மறுக்கறீங்களாமே?
முதலில், தமிழில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கணும். அதுக்கு பிறகு மற்ற மொழிகளில் நடிக்கலாம்னு நினைக்கிறேன். தமிழில் இப்ப நான் நடிக்கிற படங்கள் ரிலீசான பிறகுதான், அடுத்த தமிழ் படத்தில் நடிப்பதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். எண்ணிக்கையில் குறைந்த படங்களில் நான் நடிச்சிருந்தாலும், வெரைட்டியான கேரக்டரில் நடிச்சிருக்கேன். கிளாமர், காமெடி, நெகட்டிவ் இப்படி நிறைய கேரக்டர் பண்ணியிருக்கேன். தொடர்ந்து அந்தமாதிரி வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறதுக்காக காத்துகிட்டிருக்கேன்.

Comments