த்ரிஷா போய், அமலாபால் போய் இப்போது சூர்யாவுக்கு ஜோடியாகிறார் சமந்தா!!!

28th of June 2013
சென்னை::துருவநட்சத்திரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சூர்யாவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இணையும் மூன்றாவது படம் துருவநட்சத்திரம். இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனே தயாரித்து இயக்கவும் செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், பார்த்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
 
படத்தின் டெக்னீஷியன்கள் முதல் இதர நடிகர் நடிகைகளை சுலபமாக தேர்வு செய்த கௌதம் நாயகியை தேர்வு செய்வதில் மட்டும் குழம்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நாயகியாக முதலில் த்ரிஷாதான் ஓ.கே. ஆனார். ஆனால், த்ரிஷாவுக்கு வயதாகி விட்டதாகவும், பள்ளி மாணவி கேரக்டருக்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார் எனவும் சூர்யா சொன்னதாக தகவல் வெளியானது. த்ரிஷாவுக்குப் பதில் அமலாபால் பொருத்தமாக இருப்பார் என சூர்யா சிபாரிசு செய்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதனையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார் என்கிற செய்திகள் வெளியாயின.
 
ஆனால், அமலாபாலும் ஏனோ செட்டாகவில்லை போல் இருக்கிறது. அதற்குப் பிறகு ‘கடல்’ படத்தில் நடித்த நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசி பரிசீலிக்கப்பட்டார். காரணம், இப்போதுதான் இவர் 10-ம் வகுப்பு முடித்திருப்பதால் பொருத்தமாக இருக்கும் என்று பார்த்தார்கள். ஆனால், சூர்யா அதற்கு சம்மதிக்கவில்லையாம். முன்னணி நடிகைதான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராம்.
 
சூர்யாவுக்குப் பிடித்தால் கெளதம் மேனனுக்குப் பிடிக்கவில்லை, அவருக்குப் பிடித்தால் சூர்யாவுக்குப் பிடிக்கவில்லை என நாயகி தேடல் இழுத்துக் கொண்டே போகிறதாம். இறுதியில் ஒருவழியாக இருவரும் சமாதானமாகி சமந்தாவை ஓ.கே. செய்திருக்கிறார்கள். ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் பள்ளி மாணவியாக சமந்தாவின் நடிப்பில் திருப்தி ஏற்பட்டதால், கடைசியாக சமந்தா தான் என முடிவு செய்திருக்கிறார்கள். இருந்தாலும் படப்பிடிப்புக்கு போனபிறகுதான் நாயகி யார் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

Comments