கோச்சடையான் குறித்து டுவிட்டரில் சௌந்தர்யா புதிய தகவல்!!!

13th of June 2013
சென்னை::ரஜினியின் கோச்சடையான் பட வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிறது. இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
சரத்குமார், ஆதி, ஷோபனா, ருக்மணி, ஜாக்கிஷெராப், நாசர் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். இப்படத்தை ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் ஹாலிவுட் நிபுணர்களும் பணியாற்றியுள்ளனர். 'கோச்சடையான்' படத்தின் முதல் புகைப்படம் வெளியானதில் இருந்து, படத்தினைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதால் அதனை விளம்பரப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் செளந்தர்யா.

இந்த படத்தின் டிரெய்லர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவடையாததால் வெளியாகவில்லை. தற்போது டிரெய்லர் முழுமையாக தயாராகியுள்ளது.
ரஜினியின் அதிரடி ஆக்சன் காட்சிகள் தீபிகா படுகோனே மீதான காதல் போன்றவை டிரெய்லரில் இடம்பெற்று உள்ளன. ரஜினி நேரில் பார்த்து ஆலோசனைகள் சொல்லி டிரைலரை ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் மெருகேற்றி உள்ளார். இந்த டிரெய்லர் இன்னும் சில தினங்களில் தியேட்டர்களிலும், டி.வி. மற்றும் இணைய தளங்களிலும் வெளியாக இருக்கிறது.

இது குறித்து ரஜினியின் மகள் சௌந்தர்யா டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: நீங்கள் ஆவலாய் எதிர்பார்க்கும் ‘கோச்சடையான்’ படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவிருக்கிறது, வரவேற்க தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார். கோச்சடையான் திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Comments