மலையாள சினிமாவில் கால் பதிக்கிறார் சூர்யா!!!

Monday,10th of June 2013
சென்னை::எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்களெல்லாம் தமிழ் சினிமாவையே முழுமூச்சாக எண்ணி நடித்தவர்கள். ஆனால், அதையடுத்து வந்த ரஜினி, கமல் போன்றவர்கள் அப்படியில்லை. இந்தி சினிமா வரை நடித்தனர். அதேபோல் இப்போதுள்ள விஜய், அஜீத், சூர்யா போன்ற நடிகர்கள் தமிழுக்கே முதலிடம் கொடுத்தாலும், அண்டை மாநில மொழிப்படங்களிலும் நடித்து தங்களது வியாபார வட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இதில் சூர்யா முதலிடம் வகிக்கிறார். தற்போது அவர் நடித்துள்ள சிங்கம்-2 படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளத்திலும் வெளியாவதால், அப்படத்தின் ஆடியோ விழாவை, சென்னை, ஐதராபாத், திருவனந்தபுரம் என மூன்று ஏரியாக்களில் வெளியிட்டுள்ளனர். அப்படி திருவனந்தபுரம் சென்றபோது, தமிழைப்போலவே மலையாளத்திலும் நிறைய படங்கள் நல்ல கதைகளில் வருகின்றன. அதனால், எனக்கு நேரடி மலையாளப்படத்தில் நடிக்க வேண்டுமென்ற ஆசை மனதளவில் உள்ளது. அதனால், யாராவது இயக்குனர்கள் நல்ல கதை சொன்னால், மலையாளத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, மலையாள சினிமாவிலுள்ள சில முன்னணி இயக்குனர்கள் சூர்யாவை வைத்து தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் படம் இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்கத்
தொடங்கியுள்ளனர்.

Comments