குடும்பப் படம்- ‘யம்லா பக்லா தீவானா 2!!!

Monday,10th of June 2013
சென்னை::ரூம் போட்டு யோசித்திருக்கலாம் அல்லது தேநீர் அருந்தியபடி விவாதித்திருக்கலாம். ஆனாலும் ‘குடும்பப் படம்’ என்னும் வார்த்தைக்கான விளக்கம் மட்டும் இன்னும் கிடைக்கவேயில்லை. இதைப் போக்குவதற்காகவே ஓர் இந்திப் படம் உருவாகியிருக்கிறது. அதுதான், ‘யம்லா பக்லா தீவானா 2’ (Yamla Pagla Deewana 2). இந்தப் படத்தை தயாரித்து முக்கிய வேடத்திலும் நடித்திருப்பவர், தர்மேந்திரா. இந்தப் படத்தை பிரபஞ்சம் எங்கும் ‘சன்னி சவுண்ட்ஸ் பிரைவேட் லிட்’ வெளியிடுகிறது. இந்த நிறுவனத்தில் சன்னி தியோலும், பாபி தியோலும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே தர்மேந்திராவின் அரும்தவ புதல்வர்கள். அத்துடன் இந்த காவியப் படைப்பில் இருவரும் கதாநாயகர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.

பொறுங்கள். இன்னும் இருக்கிறது. இப்படத்துக்கு ‘கதை’ எழுதியிருப்பவர், லிண்டா தியோல். இவர் சன்னி தியோலின் மனைவி. படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் பாதியை - ஆம், அரைப் பாடலை  எழுதியிருப்பவர், கரண் தியோல். அதாவது, சன்னி தியோலின் மகன்.
இதுபோக ‘யம்லா பக்லா தீவானா 2’ல் இன்னொரு பாடலும் இடம்பெறுகிறது. அந்தப் பாடலுக்கு சன்னி தியோலும், பாபி தியோலும் இணைந்து நடனமாடியிருக்கிறார்கள். எப்படி தெரியுமா? தங்கள் தந்தையான தர்மேந்திராவின் ஸ்டைலில். 70களில் தர்மேந்திரா இந்திப் படவுலகின் ஸ்டார் நடிகராக இருந்தார். அப்போது அவர் எப்படி பாடல் காட்சிகளுக்கு தன் கை, காலை அசைப்பாரோ அப்படி இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ‘யம்லா பக்லா தீவானா’ என்பது தர்மேந்திராவின் ஃபேமஸான பாடல் ஒன்றின் முதல்வரிதான். இவ்வளவுக்கு பிறகும் ‘குடும்பப் படம்’ என்னும் வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை என்றால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பின் ‘யம்லா பக்லா தீவானா 3’ வெளியாகும். அப்போது இன்னும் எளிமையாக இவர்களே விளக்குவார்கள். ஏனெனில் 2011ல் இவர்கள் மூவரும் இணைந்துதான் ‘யம்லா பக்லா தீவானா’வை உருவாக்கினார்கள். ‘ஃபேமிலி படம்’ என்பதற்கு இதுதான் அர்த்தம் என பொட்டில் அறைந்தது போல் சொன்னார்கள். படம் பம்பர் ஹிட். 90 கோடி ரூபாயை மொத்தமாக அள்ளினார்கள். என்றாலும் சாதாரண ரசிகர்களுக்கு ‘குடும்பப் படம்’ என்னும் சொல்லுக்கான பொருள் டிகிரி சுத்தமாக விளங்கவேயில்லை. அந்தக் குறையை போக்கத்தான் முந்தையப் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், முதல் பாகத்தை இயக்கிய சமீர் கார்னிக், இந்த இரண்டாம் பகுதியை டைரக்ட் செய்யவில்லை. என்னதான் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டை சமீர் கொடுத்தாலும் மனித குலம் காலம்தோறும் தேடி வரும் கேள்விக்கான பதிலை சொல்லவில்லை அல்லவா? அதனால் அவரை விலக்கிவிட்டு சங்கீத் சிவனை டைரக்டராக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

தென்னிந்தியாவை சேர்ந்த சங்கீத் சிவன், இந்தி யாவின் டாப் மோஸ்ட் கேமராமேனான சந்தோஷ் சிவனின் சகோதரர். அடிப்படையில் ஸ்கிரிப்ட் ரைட்டர் ப்ளஸ் இயக்குநர். மோகன்லாலை வைத்து மூன்று மலையாளப் படங்களை இயக்கியிருக்கிறார். மூன்றுமே கல்லாவை நிரப்பியவை. தவிர, சன்னி தியோலை வைத்து 1997ல் ‘ஸோர்’ இந்திப் படத்தையும், பாபி தியோலை வைத்து தெலுங்கு ‘அத்தடு’ படத்தின் ரீமேக் ஆன ‘ஏக் - த பவர் ஒன்’ படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார். ஸோ, தர்மேந்திரா ஃபேமிலியின் விருப்பு - வெறுப்புகள் மனிதருக்கு அத்துப்படி. அதனால்தான் தங்கள் கனவுப் படமான ‘யம்லா பக்லா தீவானா 2’ஐ இயக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்திருக்கிறார்கள். மனிதரும் நம்பிக்கையை வீணாக்கவில்லை என்கிறார்கள். லண்டனில் படப்பிடிப்பு நடந்தபோது, யூனிட் ஆட்கள் தங்கிய ஹோட்டல், திடீரென இரவில் தீப்பிடித்து எரிந்தது. இரவு 3 மணி வரை அனைவரும் தெருவிலேயே நின்றார்கள். உயிர்சேதம் ஏற்படவில்லை என்றபோதும் தங்க மாற்று இடம் கிடைக்க வில்லை. என்றாலும் மறுநாள் ஷூட்டிங்குக்கு பிரேக் கொடுக்காமல் படப்பிடிப்பை தொடர்ந்துவிட்டார். அந்தளவுக்கு தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்தப் படத்துக்காக செலவிட்டிருக்கிறார்.

கதை?
அடிக்க வருவார்கள். முந்தைய ‘யம்லா பக்லா தீவானா’விலேயே இந்த வஸ்து இல்லை. விமர்சகர்கள் அந்தப் படத்தை கழுவிக் கழுவி ஊற்றினார்கள். 70களின் மசாலாவை சுழற்சி முறையில் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள் என பொங்கித் தீர்த்தார்கள். ஆனால், நான் ஸ்டாப் காமெடியும், ஆள் மாறாட்ட சம்பவங்களும் படத்தை கரை சேர்த்துவிட்டன.

அப்படியிருக்க இந்த இரண்டாம் பாகத்தில் மட்டும் ‘கதை’ இருக்கவா செய்யும்? வாய்ப்பில்லை. லிண்டா தியோலின் பூர்வீகம் லண்டன் என்பதால், இங்கிலாந்தில் ஏற்பட்ட ரிசஷனை மையாக வைத்து ஒரு லைனை தன் கணவரிடம் சொல்லியிருக்கிறார். அதை அப்படியே ஜஸ்வந்தர் பத், டெவலப் செய்திருக்கிறார். முதல் பாகத்துக்கு ‘கதை’, திரைக்கதையை எழுதியவர் இதே ஜஸ்வந்தர் பத்தான். எனவே முந்தைய பாகத்தில் ரசிகர்கள் ரசித்த அனைத்து விஷயங்களையும் இந்த இரண்டாம் பாகத்திலும் கொண்டு வந்திருக்கிறார். கூடவே சல்மான் கானின் ரசிகராக பாபி தியோலின் கேரக்டரையும் வடிவமைத்திருக்கிறார்.

எப்படியும் படம் வெளியானதும் ஏசி அறையில் அமர்ந்திருக்கும் விமர்சகர்கள் வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொள்வார்கள். இந்தித் திரையுலகை பின்னோக்கி இழுக்கும் படம் என கதறுவார்கள். ஆனால், கால் கடுக்க கியூவில் நின்று டிக்கெட் வாங்கும் ரசிகர்கள் ‘படம் சூப்பர்’ என மவுத் டாக்கை பரவ விட்டபடியே தங்கள் வேலையை பார்க்கப் போய்விடுவார்கள்.

இதுதான் நடக்கப் போகிறது.
என்ன... ‘குடும்பப் படம்’ என்பதற்கான அர்த்தத்தை சங்கீத் சிவனாவது விளக்கியிருப்பாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

Comments