ஃபாரின் மாப்பிள்ளை வேண்டாம் : த்ரிஷா பளீர்!!!

Thursday,2nd of May 2013
சென்னை::பத்து வருடங்களைத் தாண்டியும் பிசியாகவும், இளமையாகவும் இருக்கிறார் த்ரிஷா. ஒரு காலத்தில் மீடியாக்களுக்கு பரபரப்பு தீனி போட்டுக் கொண்டிருந்தவர் இப்போது அநியாயத்துக்கு நல்லவராகி விட்டார். மீடியா நண்பர்களைக் கண்டால் புன்னகைத்து மனம்விட்டுப் பேசுகிறார். ‘என்றென்றும் புன்னகை’க்காக சுவிட்சர்லாந்து கிளம்பிக் கொண்டிருந்தவரிடம் மாற்றத்துக்கான காரணத்தைக் கேட்டால் கலகலவென சிரிக்கிறார்.

‘‘நான் எப்பவுமே நல்ல பிள்ளைதாங்க. மீடியாக்கள்தான் என்னை பரபரப்பாக்கிக்கிட்டிருந்தாங்க. இப்ப, ‘பத்து வருஷம் த்ரிஷா பற்றி நிறைய எழுதியாச்சு பாவம்’னு ஃபீல் பண்ணி விட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன். சில நேரம் மீடியாக்களோடு சண்டை போட்டிருந்தாலும் என்னோட வளர்ச்சிக்கு கூடவே இருந்தது அவங்கதான்...’’ என்று சிரித்தவரிடம், ‘பத்து வருடத்துக்கு பிறகும் அழகாவும் பரபரன்னும் இருக்கீங்களே எப்படி...’ என்று கேட்டால் அம்மாவை நோக்கி கை காட்டுகிறார்.

‘‘எல்லாத்துக்கும் காரணம் மம்மிதான். அவங்கள நான் பெஸ்ட் ஃபிரண்டாத்தான் பார்க்கிறேன். தேவைப்படுகிற சுதந்திரம் கொடுத்துக்கிட்டே கையில கடிவாளத்தை வச்சிருப்பாங்க. அப்பா மறைந்த ஒரு விஷயம் தவிர வேறெந்த கவலையையும் எங்கிட்ட வராம பார்த்துக்கிட்டாங்க. அழகா பொறந்ததுக்கும் அவங்கதான் காரணம், அழகை தக்க வச்சிக்கிட்டதுக்கும் அவங்களே காரணம்...’’ என அநியாயத்துக்கு ஐஸ் வைத்தவர், இப்போதும் வெரைட்டியான ரோல்களில் நடித்து வருகிறார்.

‘‘தமிழ்ல ஜீவாவோட ‘என்றென்றும் புன்னகை’ல லவ்வபிள் ஹீரோயின். ஜெயம் ரவியோட ‘பூலோகம்’ படத்துல அவருக்கு பாக்சிங் கத்துக் கொடுக்கிற மாஸ்டர். தெலுங்கு ‘ரம்’ படத்துல ஆக்ஷன் ஹீரோயின். இப்படி மாறுபட்ட கேரக்டர்ல நடிச்சுட்டு இருக்கேன். இடையில கொஞ்சம் கேப் கிடைச்சப்ப நேரா மாலத்தீவுக்கு போயிட்டேன். ரெண்டு வாரத்துல ஸ்கூபா டைவிங்கோட ரெண்டு லெவல முடிச்சு சர்ட்டிபிகேட் வாங்கிட்டேன். நிஜமாவே கடலுக்கு அடியில ஒரு அழகான உலகம் இருக்குங்க. அதை அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும். அடுத்து ஸ்கை டைவிங் கத்துக்கலாம்னு இருக்கேன். ஆகாயத்துலேருந்து பூமியில குதிக்கிற அந்த அனுபவத்தை சீக்கிரம் அனுபவிப்பேன்...’’ என்று கண்கள் விரிய பேசியவருக்கு விருது படங்களில் நடிக்கவும் ஆசை இருக்கிறது.

‘‘அந்த மாதிரி கதை வந்தால் நடிக்க நான் தயார்தான். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ல ஜெசியா வாழ்ந்து காட்டியிருக்கேன். ‘அபியும் நானும்’ல ஒரு மகளா மாறியிருக்கேன். இப்படி என்னை அங்கங்க நிரூபிச்சிருக்கேன். விருதுன்னு எதையும் எதிர்பார்க்கல...’’ என்றவர், தெலுங்கு நடிகர் ராணாவுடனான காதல் குறித்து கேட்டதும் முகம் மாறுகிறார்.

‘‘ராணா என்னோட பெஸ்ட் ஃபிரண்டுன்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு. நிச்சயமா காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிக்குவேன். என் மனசுக்கு பிடிச்ச, என்னை புரிஞ்சுக்குற ஆள் கிடைச்சா அடுத்த நிமிடமே அம்மா முன்னாடி கொண்டு நிறுத்துவேன்...’’ என்று படபடத்தவரிடம் உங்கள் அம்மா மாப்பிள்ளை தேடியதாக தகவல் வந்ததே என கொக்கிப் போட்டோம்.

‘‘அதுல ஒண்ணும் தப்பில்லையே... ஒரு அம்மாவா மகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டாங்க. சொந்தத்துல தேடி ரெண்டு மாப்பிள்ளைகளை செலக்ட் பண்ணி வைச்சிருந்தாங்க. ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க, படிச்சவங்க, அழகானவங்க. ஆனா, வெளிநாட்டுல செட்டிலானவங்க. அந்த ஒரு விஷயத்துக்காகவே மறுத்துட்டேன். எனக்கு உள்ளூர் மாப்பிள்ளைதான் வேணும். இன்னும் மனசுக்குப் பிடிச்சு அப்படி யாரும் கிடைக்கலை. தேடிக்கிட்டு இருக்கேன்...’’ என்று உருட்டி விட்ட கோலி குண்டு போல் சிரித்தார் த்ரிஷா. அந்த சென்னை அதிர்ஷ்டக்காரருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

Comments