நயன்தாராவுக்கும் எனக்கும் காதல் இல்லை ; நடிகர் ஆர்யா விளக்கம்!!!

Monday,13th of May 2013
சென்னை::நயன்தாராவை நான் காதலிக்கவில்லை. இருவருக்கும் இடையே, காதல் எதுவும் கிடையாது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான்,'' என, நடிகர் ஆர்யா கூறினார். தமிழ்ப்பட இளம் ஹீரோக்களையும், நயன்தாராவையும் இணைத்து, செய்தி வெளியிடப்படுவதும், இதனால், கோலிவுட்டில் அவ்வப்போது பரபரப்பு எழுவதும் வழக்கமாக உள்ளது.

முதலில் சிம்புவும், நயன்தாராவும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், இவர்களின் காதல், திடீரென முறிந்தது. இதையடுத்து, நடிகரும், இயக்குனருமான, பிரபுதேவாவும், நயன்தாராவும் காதலித்தனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்தனர்.

இதன்பின் நயன்தாரா, "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில், ஆர்யாவுடன் நடித்தபோது, இருவரும் காதலிப்பதாக பேசப்பட்டது. இதுகுறித்து, இருவரும் மவுனம் காத்தனர்.இந்த நிலையில், ஆர்யாவும், நயன்தாராவும் நேற்று முன்தினம், திடீர் காதல் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் கசிந்தது. இருவரின் மொபைல் போனும், "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதனால், "திருமண செய்தி, உண்
மையாக இருக்குமோ' என்ற, பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்குவதற்காக, ஆர்யாவை தேடியபோது, "வலை' படத்தின், படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக, அவர், குலுமணாலி சென்றது தெரியவந்தது.

அவரை தொடர்பு கொண்டு, நயன்தாரா விவகாரம் குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:

நயன்தாராவும், நானும், நல்ல நண்பர்கள். நான், நயன்தாராவை காதலிக்கவில்லை. எங்களுக்கு இடையே, காதல் ஏதுவும் கிடையாது. நானும், நயன்தாராவும், "ராஜா ராணி' என்ற படத்தில் நடித்து வருகிறோம். இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சி, சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த செய்தி தான், வேறுவிதமாக மாறி, கடைசியில் நாங்கள் இருவரும், உண்மையிலேயே காதல் திருமணம் செய்து கொண்டது போல பேசப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

தற்போது எனக்கு, ஐந்து படங்கள் கைவசம் உள்ளன. இதை நடித்து கொடுத்துவிட்டு தான் திருமணம் செய்வது பற்றி முடிவு செய்வேன். அதுவரை, எந்த நடிகையுடன் காதல், திருமணம் என, செய்தி வந்தாலும், அது உண்மையான செய்தி இல்லை என்பதை, முன் கூட்டியே தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Comments