50 படங்களுக்குப் பிறகுதான் நடிப்பின் அருமை புரிந்தது- ஊர்வசி!!!

Wednesday,22nd of May 2013
சென்னை::என்னுடைய பெரிய அக்கா கலாதான் ‘முந்தானை முடிச்சு’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று பிரமிளா அக்கா விரும்பினார். என் அக்கா அப்போது மலையாளத்தில் அப்கம்மிங் ஹீரோயின். எனவே மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. எனவே எங்கள் வீட்டில் ‘சாரி’ சொல்லிவிட்டார்கள்.

இருந்தாலும் மரியாதை நிமித்தமாக பாக்யராஜ் சாரை சந்தித்து மன்னிப்பு கேட்பதற்காக சென்றோம். அப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். எனவே பள்ளிச் சீருடையுடன் சென்றேன். அவரைப் பார்த்து மன்னிப்பு கேட்டு விட்டு விடைபெற்றோம். இரண்டு, மூன்று மாதங்களுக்குப் பிறகு பாக்யராஜ் சார் ஆபீஸில் இருந்து சின்னா மாஸ் டரும், புரொடக்ஷன் மேனேஜரும் போனில் தொடர்பு கொண்டார்கள். ‘‘உங்களுடன் அன்று ஸ்கூல் யூனிஃபார்மில் வந்த பெண்ணை நாங்கள் செலக்ட் செய்திருக்கிறோம். நாளை அந்தப் பெண்ணை அழைத்து வாருங்கள்...’’ என்றார்கள். ஏதாவது தங்கச்சி வேடமாக இருக்கும் என்றுதான் நினைத்தோம். பின்னே... ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு கதாநாயகி கேரக்டரா கொடுப்பார்கள்? தவிர அப்போது நான் சதைப்பிடிப்பின்றி ஒல்லியாக வேறு இருப்பேன்.

எனவே ஜூனியர் ஆர்டிஸ்ட் அளவில் இருக்கும் என்றுதான் நாங்கள் நினைத்தோம். எங்கள் குடும்பம் சினிமா குடும்பம். நடிப்பதற்கு யாரும் தடை சொல்ல மாட்டார்கள். தவிர, பாக்யராஜ் சார் அழைத்து முன்பே அக்கா மறுத்திருக்கிறார். இப்போது மீண்டும் அப்படிச் செய்தால் நன்றாக இருக்காது. எனவே நடிப்பதென்று முடிவு செய்தேன். நான் நன்றாகப் படிக்கும் பெண். எனவே பள்ளியிலும் தடை சொல்ல மாட்டார்கள்.

இதையெல்லாம் மனதில் கொண்டு மறுநாள் படப்பிடிப்புக்கு சென்றேன். அங்கு போன பிறகும் நான்தான் ஹீரோயின் என்று தெரியாது. பத்து நாட்கள், பதினைந்து நாட்களில் நடிக்கக் கூடிய தங்கச்சி கேரக்டராக இருக்கும் என்கிற நினைப்பில்தான் போனேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, நான்தான் மெயின் ரோல் என்றும் என்னை வைத்துதான் முழுக்கதையும் நடக்கிறது என்றும் தெரிந்தது. ‘இந்தப் படம் முடிந்ததும் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஸ்கூலுக்குப் போய்விடுவேன்’ என்று உடன் நடிப்பவர்களிடம் தினமும் சொல்வேன். இந்தப் படம் மட்டுமல்ல, ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் அப்படித்தான் பல நாட்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தேன்...’’ என்று சிரித்த ஊர்வசி, தொடர்ந்தார்.

‘‘ஒரு கட்டத்தில் இனி பள்ளிக்கே செல்ல முடியாது என்பதை உணர்ந்தேன். ஆனாலும் படிப்பு ஆசை விடவில்லை. தொலைதூரக் கல்வி மூலம் படிப்பைத் தொடர நினைத்தேன். அப்போதுதானே டீச்சராக முடியும்? அடிமனதில் இருந்த இந்த டீச்சர் கனவு என்னை விட்டு விலகவே இல்லை.

ஆனால், நான் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. எக்ஸாம் சமயத்தில் சத்தியன் அந்திக்காடு இயக்கிய ‘பொன்முட்டையிடுன தாராவு’  மலையாளப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை எடுத்தார்கள். ஆல் ஆர்டிஸ்ட் காம்பினேஷன் என்பதால் ஷூட்டிங்கை தள்ளிவைக்க முடியாது. அப்படி செய்தால் தயாரிப்பாளர் பெருமளவில் நஷ்டப்படுவார். எனவே வேறு வழியின்றி என் படிப்புக் கனவை மூட்டை கட்டி வைத்தேன்.

‘முந்தானை முடிச்சு’ எனக்குக் கொடுத்த வரவேற்பை, அங்கீகாரத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. கேரளாவில் அந்தப் படம் ஓடியளவுக்கு வேறு தமிழ்ப் படங்கள் இதுவரை ஓடவில்லை. அந்தப் படம் ஆந்திரா, கர்நாடகத்திலும் பெரிய ஹிட். என்ன கொடுமை என்றால், அந்தப் படத்தின் அருமை பெருமை எனக்கு அப்போது  தெரியவில்லை...’’ என்று சொன்னவர், நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்ட காலகட்டத்தை நினைவு கூர ஆரம்பித்தார்.

‘‘உண்மையைச் சொல்வதென்றால், நடிப்பு என்பதும், சினிமா வாய்ப்பு என்பதும் எவ்வளவு அரிதான காரியம், விஷயம் என்பது 50 படங்களில் நடித்த பிறகுதான் உறைத்தது. அதுவரை விளையாட்டுச் சிறுமியாகத்தான் நடந்து கொண்டேன். அதையெல்லாம் இந்தத் திரைத்துறை பொறுத்துக் கொண்டதை நினைத்தால் நெகிழ்ச்சியாக இருக்கிறது...’’ என்று கண்கலங்கினார்.

Comments