இலங்கை நார்வே திரைப்பட விருது விழா குழுவினர் பணம் கேட்கின்றனர், நாலு காசு பார்க்க நடக்கும் நார்வே திரைப்படவிழா! - கே.எஸ். தங்கசாமி புகார்!

Saturday,27th of April 2013
சென்னை::பீட்ஸா, சுந்தரபாண்டியன், வழக்கு எண் 18/9, அட்டக்கத்தி, சேட்டை, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தோனி, ராட்டினம், நீர்பறவை, ஒரு கல் ஒரு கண்ணாடி, புதுமுகங்கள் தேவை, இலங்கையில் முழுக்கு முழுக்க உருவான ‘இனி அவன்’, ஆஸ்திரேலியாவில் உருவான தமிழ் படமா ‘இனியவளே காத்திருப்பேன்’, கனடா வின்ச் ஹாரா பூக்கள் உள்ளிட்ட 15 படங்கள் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் தற்போது நடைபெற்று வரும் (ஏப்ரல் 24 முதல் 28ம் தேதி வரை...) திரைப்பட விழாவில் கலந்து கொண்டு விருது பெற தேர்வாகியிருக்கும் தமிழ் திரைப்படங்கள் என கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் மேற்படி திரைப்படங்களின் இயக்குநர்கள் புடைசூழ நார்வே விருது குழு சார்பில் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டன!
 
இந்நிலையில் சென்னையில் உள்ள தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தில் ‘ராட்டினம்’ படத்தை தொடர்ந்து ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ எனும் பெயரில் படத் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து நடிகர் ஆர்யாவின் சகோதரர் சத்யா (புத்தகம் அறிமுகம்)வை வைத்து இயக்கும் இயக்குநர் கே.எஸ். தங்கசாமி, நார்வே திரைப்படவிழா குறித்து ஒரு புகார் மனுவை கொடுத்தார்.
 
அதில் இலங்கை நார்வே திரைப்பட விருது விழா குழுவினர் பணம் கேட்கின்றனர். இனி இதுமாதிரி விழாக்களுக்கு தனிப்பட்ட நபர்கள் இல்லாமல் இயக்குநர் சங்கமே பரிந்துரை செய்ய வேண்டும் எனும் யோசனையும் தெரிவித்திருக்கிறார் தங்கசாமி எனக் கேள்விப்பட்டு அவரை தொடர்பு கொண்டு விஷயம் என்னவென்று கேட்டோம்!
 
அந்த விபரீதத்தை இங்கு அவரே விளக்குகிறார்...நார்வே திரைப்பட விழா மற்றும் விருது விழாவிற்கு எனது ‘ராட்டினம்’ படம் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என அறிவித்து விட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன் சென்னையில் நடந்த பிரஸ் மீட்டில் என்னையும் மேடை ஏற்றி நானும் நார்வே செல்கிறேன் என அறிவிக்க செய்து விட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் நார்வே பிலிம் பெஸ்டிவெல்லில் உங்கள் ‌படம் காசு கொடுத்து கலந்து கொள்ளும் கேட்டகிரியில் தேர்வாகியிருக்கிறது!
 
எனவே நார்வே போய்வர ஆகும் விமான செலவு, தங்கும் செலவு மற்றும் விழாவில் உங்கள் படம் திரையிடப்படுவதற்கான செலவு உள்ளிட்டவைகளுக்கான பெரும் பணத்தில் ஒரு பாதியையாவது முன்கூட்டியே கொடுத்து விடுங்கள்... என நார்வே விழாவின் சென்னை பிரதிநிதிகள் தொலைபேசியில் தொல்லை செய்தனர். பணம் கொடுத்து நம் படத்தை திரையிடும் அளவிற்கு மோசமான படமா? நாம் எடுத்திருக்கிறோம் என கருதிய நான் எனக்கு இப்படி ஒரு விழாவில் கலந்து கொள்ள உடன்பாடில்லை என தெரிவித்து விட்டேன்! கூடவே அதை மறந்தும் விட்டேன்.
 
இந்நிலையில் 24ம் தேதி  நார்வே செல்வதற்கு உஙகளுக்கும் டிக்கெட் போட்டாச்சு உங்களால் முடிந்ததை கொடுத்துவிட்டு உடனடியாக புறப்பட்டு வாருங்கள் என்று ஒரு போன் வந்தது. எனக்கு விருப்பமில்லை என்று அந்த போன்காலை அத்தோடு துண்டித்த விட்டேன்.
இந்நிலையில் 25ம் தேதி காலை ஐந்தரை மணிக்கு என் ராட்டினம் பட ஹீரோ லகுபரன், சார் என்னை நார்வே கூப்பிடுகின்றனர் பாதி பணம் கேட்கின்றனர். நீங்களும் வருகிறீர்களாமே எனக் கேட்டார். அவரிடம் நான் வரவில்லை. நீ விரும்பினால் சென்று வா... என்று கூறிவிட்டேன். ஆனாலும், எனக்கு மிகுந்த அவமானமாகிவிட்டது. நார்வே விழாவுக்கும் விருதுக்கும் நம் படம் தேர்வு என அறிவித்துவிட்டு நம்மிடம் காசு கேட்பது நம்பிக்கை துரோகமாகவும் மோசடியாகவும் பட்டது. உடனடியாக, இயக்குநர் சங்கத்திற்கு சென்று அங்கிருந்த தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தின் மேனேஜரிடம் இனி., எதிர்காலங்களில் இதுமாதிரி திரைப்பட விழாவிற்கு படங்களையும் பங்களிப்புகளையும் இயக்குநர் சங்கமே தேர்வு செய்து அனுப்ப வேண்டும் என்று என் கைபட ஒரு புகார் மனுவை எழுதிக் கொடுத்துவிட்டு வந்தேன்!
 
அதன் மீது 26ம் தேதி  இயக்குநர் சங்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் இயக்குநர் தங்கசாமி!
இந்நிலையில் 26ம் தேதி இரவு நார்வே தலைநகர் ஆஸ்லோவிற்கு இயக்குநர்கள் பிரபு சாலமன், லிங்குசாமி, ‘ராட்டினம்’ படத்தின் புதுமுக நாயகன், நாயகி லகுபரன், சுவாதி மற்றும் சினியர் தமிழ் சினிமா இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் 25ம் தேதி விமானம் மூலம் சென்னையில் இருந்து கிளம்பி சென்றுள்ளனர். 26ம் தேதி நாயகர்கள் உதயநிதி ஸ்டாலின், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கிளம்ப இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அவர்களை தடுக்கும் நோக்கில் இயக்குநர் சங்கத்தில் நான் புகார் செய்யவில்லை... இனி எதிர்காலத்தில் இதுமாதிரி நடக்க கூடாது என்பதற்காகவே புகார் செய்தேன் என்கிறார் இளம் இயக்குநர், தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி! இதே மாதிரி போனவருடம் நார்வே விருது குழுவினர் காசு கேட்பதாக புலம்பினார் ‘வெங்காயம்’ திரைப்பட இயக்குநர் சங்ககிரிராஜ்குமார். இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம், திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட தமிழ் சினிமா சங்கங்கள் இனி விழித்துக் கொள்ளுமா? எனும் கேள்விகள் ஒரு பக்கம் இருந்தாலும், நார்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக இதுமாதிரி தமிழ் சினிமாவையும், தமிழ் சினிமா பிரபலங்களையும் கொண்டு நார்வே தமிழ் திரைப்படவிழாவை நடத்திவரும் வசீகரன் சிவலிங்கத்திற்கு இதெல்லாம் தெரியுமா? அவருக்கும் இதில் உடன்பாடு உண்டா? எனும் கேள்விகள் மறுபக்கம் எழுகின்றது! நிஜம் என்னவோ?! 

Comments