சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா!!!

Friday,19th of April 2013
சென்னை::இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில், நடக்கிறது. இந்தியாவில் சினிமா துவங்கப்பட்டு, நூறாண்டு ஆனதையொட்டி, "இந்திய சினிமா நூற்றாண்டு விழா' தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில், வரும் ஜூலை,12, 13 மற்றும் 14ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.
விழாவில், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா முதல்வர்கள், கலந்து கொள்கின்றனர். நான்கு மாநிலங்களை சேர்ந்த முன்னணி சினிமா நட்சத்திரங்கள் உட்பட, அனைத்து திரையுலகத்தினரும் பங்கேற்கின்றனர். இதனால், ஐந்து நாட்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத் தலைவர், கல்யாண் கூறியதாவது: சென்னை நேரு ஸ்டேடியத்தில், விழா நடக்கிறது. இதில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்படங்கள் குறித்த சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஜூலை,13ம் தேதி மாலையில், நந்தனம், ஓய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, தென்னிந்திய மொழிப் பட சாதனையாளர்களுக்கு விருது வழங்கி, பாராட்டுகிறார்.
விழாவில், இந்தி நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் உட்பட, இந்திய திரையுலகத்தின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்.நான்கு மாநிலங்களை சேர்ந்த திரையுலக சாதனையாளர்களை தேர்வு செய்வதற்கு, ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியே, குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகில், சாதனையாளர்களை தேர்வு செய்வதற்கு, திரைப்பட இயக்குனர், பாலசந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Comments