மீண்டும் ஸ்ரீதேவியுடன் இணையும் கமல்ஹாசன்!!!

Friday,15th of February 2013
சென்னை::30 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனும், நடிகை ஸ்ரீதேவியும் இணைந்து ஒருபடத்தில் நடிக்கவுள்ளனர், இத்தகவலை நடிகர் கமலே கூறியுள்ளார். 1970-80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் ஆகிய இருவருடன் பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் கமலுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து படங்களும் பெரிதும் ‌பேசப்பட்டன. குறிப்பாக 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிகப்பு, மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை போன்ற படங்களை சொல்லாம். இருவரும் தமிழில் கடைசியாக மூன்றாம் பிறை படத்தில் நடித்தனர். அதன்பிறகு பாலிவுட் போன ஸ்ரீதேவி அங்கும் முன்னணி நடிகையாக உயர்ந்து, போனி கபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டிலானார்.

சமீபத்தில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஸ்ரீதேவி. இந்நிலையில் கமலும், ஸ்ரீதேவியும் மீண்டும் இணைந்து நடிக்க போவதாகவும், அது மூன்றாம் பிறை படத்தின் இரண்டாம் பாகம் என்று தகவல்கள் வெளியான நிலையில், இப்போது கமலே ஸ்ரீதேவியுடன் தான் மீண்டும் நடிக்க போவதாக கூறியுள்ளார். சமீபத்தில் கமல் அளித்த பேட்டி ஒன்றில், ஸ்ரீதேவியுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன். கதையும் தயாராகி வருகிறது, நானே எழுதுகிறேன். அவருக்குப் பொருத்தமானதாக இருக்கும். முழு விவரம் இன்னும் முடிவாகவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து ஸ்ரீதேவியிடம், கமல் போனில் பேசியதாகவும், ஸ்ரீதேவிக்கும் படத்தின் கதை பிடித்துபோய் நடிக்க சம்மதம் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை பற்றிய முழு அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது. அது மூன்றாம் பிறை பார்ட்-2-வா அல்லது வேறொரு புதிய படம் என்பது அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும்

Comments