ஹீரோயின் முக்கியத்துவ கதையில் நயன்தாரா திடீர் கவனம்!!!

Monday,11th of February 2013
சென்னை::ஹீரோயின் முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் நயன்தாரா. பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார் நயன்தாரா. அஜீத், ஆர்யா போன்றவர்களுடன் நடிக்க ஒப்புக்கொண்டார். சமீபகாலமாக அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் ஸ்கிரிப்ட்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கி உள்ளார். பாலிவுட்டில் வித்யாபாலன் நடித்த ‘கஹானி இந்தி ரீமேக்கில் ஆரம்பத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, சமீபத்தில் திடீரென்று ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஹீரோயின் முக்கியத்துவம் கொண்ட கதைகளை அதிகம் கேட்க ஆரம்பித்திருக்கிறார்.

இயக்குனர் சுந்தர்.சி. ஹீரோயின் முக்கியத்துவம் கதையொன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். ‘அரண்மனை என்று பெயரிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க கேட்டிருக்கிறார் சுந்தர்.சி இதில் நடிப்பதற்கான முடிவை விரைவில் சொல்வதாக நயன்தாரா கூறி உள்ளார். என்.டி.பாலகிருஷ்ணாவுடன் ‘ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் சீதை வேடத்தில் அவர் நடித்திருந்தார். அந்த வேடத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பை மனதில் வைத்தே ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள கதைகளில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே சுந்தர். சி. ‘மத கஜ ராஜா, ‘தீயா வேலை செய்யணும் குமாரு என்ற இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இப்படங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

Comments