ரஜினிக்காக கதை எழுதுகிறார் இயக்குனர் ஆனந்த்!!!

Tuesday,26th of February 2013
சென்னை::கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பட ஸ்கிரிப்ட் பணி ரகசியமாக நடக்கிறது. சூர்யாவுடன் ‘அயன்’, ‘மாற்றான்’, ஜீவாவுடன் ‘கோ’ போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினியை அவ்வப்போது சந்தித்து ஆலோசனை பெற்றுவருகிறார். இந்நிலையில் ரஜினி நடிக்கும் படத்தை கே.வி.ஆனந்த் இயக்குவது பற்றிய தகவல் கசிந்துள்ளது. அதில்,‘ரஜினிகாந்த் நடிக்க சவுந்தர்யா இயக்கும் கோச்சடையான், கே.எஸ்.ரவிகுமார் இயக்க ரஜினி நடிக்கும் ‘ராணா’ ஆகிய இரண்டு படங்களை தயாரிக்கிறது மும்பையை சேர்ந்த ஈராஸ் நிறுவனம். இந்நிறுவனம் தனது 3வது தயாரிப்பாக ரஜினி நடிக்கும் படத்தையே தயாரிக்க உள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகி உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்க உள்ளார். ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி’‘படத்திற்கு ஆனந்த் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்போது அவரது பணி ரஜினியை கவர்ந்ததுடன் அவர் இயக்கத்தில் வெளியான கோ, அயன் ஆகிய படங்களும் கவர்ந்தன. வர்த்தக ரீதியாக சரியான கலவையுடன் படங்களை ஆனந்த் இயக்கி இருந்ததை பாராட்டினார். இந்நிலையில் கடந்த 6 மாதமாக ரஜினி நடிக்கும் படத்துக்கான ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணியில் ஆனந்த் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இதற்காக அவ்வப்போது ரஜினியை அவர் சந்தித்து பேசி வருகிறார். இந்த சந்திப்பை ரகசியமாக வைத்திருக்கிறார் ஆனந்த். இதற்கிடையே விஜய் படத்தை ஆனந்த் இயக்கப்போவதாக சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments