சினிமாவுக்கு வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை - துளசி!

Friday,18th of January 2013
சென்னை::சினிமாவுக்கு வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என முன்னாள் நடிகை ராதாவின் மகளும், கடல் படத்தின் நாயகியுமான துளசி நாயர் கூறினார்.

தாய் நடிகை ராதா, பெரியம்மா நடிகை அம்பிகா என சினிமாவின் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்து விட்டு எப்படி உங்களால் இப்படி நினைக்க முடிந்தது என்று கேட்க.. நேராக கடல் படப்பிடிப்பு நடக்கும் தளத்துக்கேச் சென்றோம்.

ராதாவைப் போலவே அழகாக சிரித்துக் கொண்டே நம்மிடம் பேச ஆரம்பித்தார். சினிமாவில் என்ன, பள்ளியில் ஒரு நாடகத்தில் கூட நான் நடித்ததில்லை. அப்படி இருக்க நான் சினிமாவில் நடிக்கிறேன் என்றால், அது முழுக்க முழுக்க மணிரத்னம் சார் காரணம். நான் பள்ளி இறுதியாண்டுத் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த போது, மணிரத்னம் சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. கடல் படத்தில் நடிக்க. நடிப்புப் பற்றி ஒன்றுமே தெரியாத எனக்கு மணிரத்னம் சார் தான் குருவாக இருந்து அனைத்தும் கற்றுத் தருகிறார் என்கிறார் உற்சாகத்தோடு.

கார்த்திக் சார் மகன் கௌதமோடு இணைந்து நடிப்பது பற்றி உங்கள் அனுபவம் எப்படி இருக்கிறது?

கௌதம் கார்த்திக்கும் என்னைப் போலவே படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் பல விஷயங்களை புரியாமல் பார்த்துக் கொண்டிருப்பார். எங்களுக்குப் புரியாத பல விஷயங்கள் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருப்போம். மணி ரத்னம் சார் எங்களுக்கு உதவி செய்வதால் எந்தக் கவலையும் இல்லாமல் நடித்து வருகிறோம் என்றார் துளசி.

ஒரு வீட்டில் இருந்து இரண்டு கதாநாயகிகள் நடிக்க வந்திருக்கிறீர்கள். உங்கள் சகோதரி கார்த்திகாவின் உதவி பற்றி?

நான் கார்த்திகாவைப் பார்த்து பார்த்துத்தான் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறேன். எங்களுக்கு படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நாங்கள் இருவரும் பல விஷயங்களைப் பற்றி பேசுவோம். அலுப்பு ஏற்படும் வரை பேசிக் கொண்டே இருப்போம். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு வரும் போதும், கார்த்திகா தொலைபேசியில் அழைத்து இன்றைய படப்பிடிப்பு எப்படி நடந்தது என்று கேட்பாள். அவளிடம் பரிமாறிக் கொள்வது நல்ல விஷயமாக இருக்கும் என்கிறார் துளசி.

கடல் படத்தைப் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

இந்த படத்தில் எனது நடிப்பையும், கதாப்பாத்திரத்தையும் மக்கள் விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு சாதாரண பெண், சினிமாவில் அறிமுகமானால், அவளை எவ்வாறு பார்ப்பார்களோ அப்படியே என்னைப் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன். யாரோடும் என்னை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் என்று இந்த இளம் நடிகை நம்மிடம் கேட்டுக் கொள்கிறார்.

இவர் சொன்னால் நாம் என்ன தட்டவாப் போகிறோம்.. கடல் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டே இனிதே விடைபெற்றோம் துளசி நாயரிடம் இருந்து

Comments