நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஜே.வி!!!

Monday,14th of January 2013
சென்னை::கலைஞர் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நாளைய இயக்குனர்கள்' என்ற நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான ஜே.வி மீடியா டீரீம்ஸ் நிறுவனம், தற்போது 'ஜே.வி.மீடியா டிரீம்ஸ் பிலிம் புரொடக்ஷன் யூனிட்' என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கியிருக்கிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று சென்னை, ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஜே.வி மீடியா டிரீம்ஸ் திரைப்பட நிறுவனத்தையும், இந் நிறுவனத்தின் முதல் மூன்று திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கே.பாக்யாராஜ், இராம.நாராயணன், நடிகை நமீதா, கோவை சரளா, இயக்குநர்கள் பாலாஜி மோகன், கார்த்தி சுப்புராஜ், விக்ரமன், நடன இயக்குநர் ரகுராம், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

திரைப்பட ஒளிப்பதிவாளர் ஜே.வி என்பவரால் தயாரிக்கப்பட்ட நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி மக்களிடையும், உதவி இயக்குநர்களிடையும் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையும் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல இளைஞர்கள், இதில் நடுவர்களாக பங்குபெற்ற இயக்குநர்களின் அறிவுரையால் சினிமா துறையைப் பற்றியும், திரைப்படம் இயக்குவது பற்றியும் அனுபவத்தைப் பெற்றார்கள். சிலர் இந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு மாபெரும் வெற்றி பெற்ற முழுநீள திரைப்படங்களையும் இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநர்களாக வலம் வருகிறார்கள்.

'காதலில் சொதப்புவது எப்படி' பட இயக்குநர் பாலாஜி மோகனும், 'பீட்சா' என்ற படத்தை இயக்கிய கார்த்தி சுப்புராஜும், நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குறும்படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சி மூன்றாவது சீசனின் அடையெடுத்து வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் ஜே.வி மீடியா டிரீம்ஸ் நிறுவனத்தினர் இந்த புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தால், நாளை இயக்குனர்களுக்கு இன்னும் ஒரு கூடுதல் பலம் கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Comments