விஸ்வரூபம் பட பிரச்னை : ரஜினிகாந்த் அறிக்கை!!!

Saturday,26th of January 2013
சென்னை::கமலின் ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த சில நாட்களாக ‘விஸ்வரூபம்’ திரைப்பட பிரச்னைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன். கமல் எனது 40 ஆண்டு கால நண்பர். யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்துகொள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன். விஸ்வரூபம் படம், தணிக்கையான பிறகு தியேட்டர்களில் வெளியிடுவதற்கு முன்பே, இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காட்டியதில் இருந்தே இஸ்லாமிய சமூகத்தின் மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும் மரியாதையையும் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. இந்த படம் தயாரிக்க, 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு கமல்ஹாசன் என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது என் மனம் கலங்குகிறது. கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்கு காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில் கொண்டு இந்த படத்தை முழுமையாக தடை செய்யணும் என்ற கருத்தில் இருந்து மாறி, கமல் வந்த பிறகு கலந்துபேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரி செய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மீலாது நபி வாழ்த்துக்களுடன் இஸ்லாமிய சகோதரர்களை கேட்டுக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த்.

Comments