சீரியஸ் படங்களுக்கு நோ ரெஸ்பான்ஸ்!!!!!

Sunday,20th of January 2013
சென்னை::தமிழ் சினிமா ரசனை இப்போது காமெடியை நோக்கித் திரும்பியிருக்கிறது. முன்பெல்லாம் 100 படங்கள் வெளிவந்தால் அதில் பத்து படங்கள் காமெடி படங்களாக இருக்கும். ஆனால் இப்போது 50 சதவிகித படங்கள் காமெடி படங்களாக இருக்கிறது. படம் ரசிகனை சிரிக்க வைக்கிறதோ இல்லையோ காமெடி படம் என்ற முத்திரையோடுதான் பெரும்பாலான படங்கள் வெளிவருகிறது. கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற ‘நண்பன்’, காதலில் சொதப்புவது எப்படி, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘கலகலப்பு’, ‘அட்டகத்தி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற படங்கள் காமெடியை மையமாகக் கொண்டவை. ‘துப்பாக்கி’ மட்டும் காமெடியை கடந்து வெற்றி பெற்ற படம். இந்த ஆண்டின் முதல் வெற்றிப்படமாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்கிற காமெடி படம் அமைந்திருக்கிறது.

கடந்த ஆண்டு கனத்த கதை அம்சத்தோடு வெளிவந்த, ‘அரவான்’, தோனி’, ‘சாட்டை’, ‘மயிலு’, ‘ராட்டினம்’ போன்ற படங்கள் கவனிக்கப்பட்டதே தவிர, மக்களின் அமோக வரவேற்பை பெறவில்லை. இதற்கு காரணம் ரசிகர்களின் ரசிப்புத் தன்மை காமெடியை நோக்கி திரும்பி விட்டது என்கிறார்கள். தற்போது ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’, ‘ஒன்பதுல குரு’, ‘யாருடா மகேஷ்’, ‘இருவர் மீது ஒருவர் சாய்ந்து’, ‘சொகுசு பேருந்து’ உட்பட ஏராளமான காமெடி படங்கள் தயாரிப்பில் உள்ளது.

“காமெடி ரசனை என்பது தரமான ரசனைதான். அதை குறைத்து மதிப்பிட முடியாது. இன்றைக்குள்ள இளைஞர்கள் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். எனவேதான் ரசிகன் பணத்தையும், நேரத்தையும் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக சந்தோஷத்தை கேட்கிறான். இது வருத்தத்தோடு கவனிக்கப்பட வேண்டிய விஷயம்தான். காமெடி படங்களை மட்டுமே ரசிப்பது எப்படி நல்ல ரசனை இல்லையோ, அதைப் போலவே நல்ல படங்களை ரசிக்காமல் புறந்தள்ளுவதும். இந்த நிலை எப்படி உருவானதோ, அதே வேகத்தில் மாறவும் கூடும். ஒரே ஒரு படம் ரசிகனின் ரசிப்புத் தன்மையை வேறு தளத்துக்கு கொண்டு சென்ற நிகழ்வுகளும் ஏராளம் இருக்கிறது’’ என்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.

இயக்குனர் பாண்டிராஜ் கூறும்போது, “எங்கு பார்த்தாலும் பிரச்னை, பிரச்னைதான். தியேட்டருக்குள் உட்கார்ந்தால் அங்கேயும் பிரச்னையை திணிக்கும்போது ரசிகன் வெறுப்பாகிறான். கடந்த ஆண்டு வெற்றிபெற்ற காமெடி படங்கள் அனைத்தும் தனித்தனியான களத்தில் தனித்தனிப் பிரச்னைகளை சொன்னவை. அதனால்தான் வெற்றி பெற்றது. அதே நேரம் நல்ல படங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது. காமெடி படங்கள்தான் வெற்றி பெறுகிறது என்று எல்லோரும் காமெடி படம் எடுக்க ஆரம்பித்தால், அதுவே ஆபத்தாக முடியும்’’ என்கிறார்.

“மலையாளத்தில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களும், காமெடி படங்களும் சம அளவில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கும் வித்தியாசம் அங்கு இல்லை. இந்த ரசனை மாற்றம் நல்ல படங்கள் வெளிவராமல் செய்து விடும். சீரியசான படங்களைத் தரும் நல்ல இயக்குனர்கள்கூட காமெடியின் பக்கம் திரும்பக்கூடும். சினிமா என்பது அழுத்தமான சமுதாய மாற்றத்துக்கான சக்தி என்பது மாறி, அது வெறும் ஹியூமர் கிளப்பாக மாறிவிடும் ஆபத்திருக்கிறது’’ என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

Comments