நடிகை குஷ்புவுக்கு எதிராக போராட்டம் : இந்து மக்கள் கட்சி அறிக்கை!!!

Tuesday,11th of December 2012
சென்னை::ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் என்று இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலையை அணிந்ததால் நடிகை குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக இந்து மக்கள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நடிகை குஷ்பு கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார். ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் இந்துக் கடவுள் படங்கள் அச்சிட்ட சேலை அணிந்து பங்கேற்று உள்ளார். அவரது சேலை பார்டரில் பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், யோகங்களின் தலைவர் கிருஷ்ணர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை போதித்த ராமர் போன்ற இந்து கடவுள் படங்கள் உள்ளன.

அதை மார்பில் போர்த்திக் கொண்டு விழாவில் பங்கேற்று உள்ளார். இது இந்துக் கடவுள்களை அவமதிப்பது ஆகும். இந்த குற்றத்தை அவர் தெரியாமல் செய்து இருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தெரிந்தே செய்து இருந்தால் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Comments