விலகிக்கொண்ட சூர்யா! இனி பிரகாஷ் ராஜுடன்!!!

Thursday,6th of December 2012
சென்னை::பொதுவாகவே அதிக தொலைக்காட்சி விளம்பரங்களில் தலைகாட்டுபவர் சூர்யா. காஃபி விளம்பரத்திலிருந்து செல்ஃபோன் விளம்பரம் வரை பல விளம்பரங்களில் நடித்த சூர்யா, விஜய் தொலைக்காட்சியில் நடந்த ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ என்ற குவிஸ் போட்டியை தொகுத்து வழங்கினார். இந்த குவிஸ் போட்டியின் மூலம் ரசிகர்களுடன் மேலும் நெருங்கினார் சூர்யா.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் கடைசி எபிஸோடில் சூர்யா “ படங்களில் நடிக்கும் போது கதாபாத்திரத்திற்கு ஏற்றது போல் பலமுறை என்னை நான் மாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் நானாக இருந்து, என்னை பல வகைகளில் வளர்த்துக்கொண்ட இடம் இது. தினம் தினம் புதிதாக எதாவது கற்றுக்கொண்ட இந்த இடத்தை பிரிய மனம் வரவில்லை” என செண்டிமெண்டாக பேசிவிட்டு அன்றைய நிகழ்ச்சியை இனிதாக நடத்தி முடித்தார்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி முடிந்ததும் மாற்றான் படத்திற்கான புரமோஷன் வேலைகளில் இறங்கிய சூர்யா, மாற்றான் ரிலீஸான பிறகு சிங்கம்-2 படத்தில் கமிட் ஆகிவிட்டார். இந்நிலையில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் அடுத்த பாகம் எடுக்க முடிவெடுத்து அதற்கான செயல்களில் இறங்கியது விஜய் தொலைக்காட்சி. சிங்கம் படத்தின் முதல் பாகத்தில் நடித்த சூர்யா இப்போது இரண்டாம் பாகத்தில் நடிப்பது போல, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனையும் தொகுத்து வழங்குவார் என்ற நம்பிக்கையில் இருந்த விஜய் தொலைக்காட்சிக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது சூர்யாவின் முடிவு.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி இரண்டாம் சீசன் தொகுத்து வழங்க சூர்யாவுடன் பேசிய போது, அதற்கு மறுத்துவிட்டாராம் சூர்யா. தவிர்க்க முடியாத சில காரணங்களால் சூர்யா வேண்டாம் என்று கூறிவிட்டதால் தென்னிந்திய மொழிகளில் பாப்புலரான மற்றொரு நடிகரை தேர்ந்தெடுத்துள்ளது விஜய் தொலைக்காட்சி.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் பிரகாஷ்ராஜ் தான் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்குகிறார். சூர்யா நடித்துக்கொண்டிருக்கும் சிங்கம் 2 படத்தில், சிங்கம் முதல் பாகத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments