ரகுமானிடம் பாட சான்ஸ் கேட்டார் தபு!!!

Wednesday,5th of December 2012
சென்னை::ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடுவதற்கு வாய்ப்பு கேட்டார் தபு. சிறைச்சாலை, சிநேகிதி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை தபு. இந்தியில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் தேர்வு செய்தே ஒப்புக்கொள்கிறார். சமீபத்தில் இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். அப்போது அங்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வந்திருப்பதை அறிந்து அவரை சந்தித்தார். ‘எனக்கு இசையில் ஆர்வம் அதிகம். இந்துஸ்தானி இசையும் தெரியும். சொந்த குரலில் படங்களில் பாட ஆசை’ என கூறினார்.

இதைக்கேட்ட ரகுமான் அவருக்கு வாழ்த்து கூறியதுடன், ‘சிடியில் உங்கள் குரலை பதிவு செய்து அனுப்புங்கள். பிடித்திருந்தால் வாய்ப்பு தருகிறேன்’ என்றார். அதைக்கேட்டு சந்தோஷம் அடைந்தார் தபு. மும்பை திரும்பியதும் சிடியில் தனது குரலில் ஒரு பாடலை பதிவு செய்தார். அந்த சிடியை ஏ.ஆர்.ரகுமானுக்கு அனுப்பி வைத்தார். இவரது குரல் பிடித்து ரகுமான் பாடுவதற்கு வாய்ப்பு அளித்தால் பாலிவுட்டில் சொந்த குரலில் பாடும் இரண்டாவது நடிகை என்ற பெருமை தபுவுக்கு வந்து சேரும். ஏற்கனவே பிரியங்கா சோப்ரா ஒரு படத்தில் சொந்த குரலில் பாடல் பாடி இருக்கிறார்.

Comments