வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்ட 'யாரடா மகேஷ்' பாடல்கள்!!!

Thursday,6th of December 2012
சென்னை::புதிய சிந்தனையோடும், புதிய திரைக் களத்தோடும் கோடம்பாக்கத்தில் அறிமுகமாகும் ஒவ்வொரு புதுமுக இயக்குநர்களின் படங்களும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த விதத்தில் மேலும் ஒரு படமாக உருவாகியிருக்கும் படம் தான் 'யாரடா மகேஷ்'.

சந்தீப் கிஷன் என்ற புதுமுகம் இதில் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக டிம்பிள் என்ற புதுமுகம் நடிக்கிறார். ஹீரோ சந்தீப் கிஷன், சென்னையைச் சேர்ந்தவர் தான் என்றாலும், அவருக்கு தெலுங்கு சினிமாவிலும், இந்தி சினிமாவிலும் தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது மறந்தேன் மன்னித்தேன் படத்தில் லஷ்மி மஞ்சுவுக்கு ஜோடியாக நடித்து வரும் சந்தீப்புக்கு இது தமிழில் இரண்டாவது படமாகும்.

இளைஞர்களை கவரும் விதத்தில் காதலையும், காமெடியையும் கலந்த கலவையாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஆர்.மதன் குமார் இயக்கியிருக்கிறார். கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த வருடங்களின் அறிமுக வெற்றி இயக்குநர்கள் சிலரை மேடையில் வரவழைத்து அவர்கள் கையால் பாடலை வெளியிட்டது எல்லோரின் பாராட்டையும் பெற்றது . 'ஆரண்ய காண்டம்' தியாகராஜா குமாரராஜா , 'மௌன குரு' சாந்த குமார் , 'நான்' ஜீவா ஷங்கர், 'ஈரம்' அறிவழகன், 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' பாலாஜி, 'பீட்சா' கார்த்திக் சுப்புராஜ், 'அட்டகத்தி' ரஞ்சித் ஆகிய இளைய இயக்குநர்கள் ஒருவரை ஒருவர் பாராட்டி புகழ்ந்தது எல்லோரையும் கவர்ந்தது.

நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட 'யாரடா மகேஷ்' படத்தின் பாடல்களும், டிரைலரும் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் கவர்ந்தது. விரைவில் தமிழக மக்களையும் கவர இருக்கிறது.

Comments