கமல்ஹாசன் பிறந்தநாள்: தென்னிந்தியா முழுவதும் உடல் மற்றும் ரத்த தானம் நடைபெறுகிறது!!!

Sunday,4th of November 2012
சென்னை::நடிகர் கமல்ஹாசனின் 58வது பிறந்தநாள் வரும் நவம்பர் 7ஆம் ஆகும். அவருடைய இந்த பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் தென்னிந்தியா முழுவதும் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் செய்கிறார்கள்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களிலும் உள்ள அவர்களுடைய ரசிகர்கள் கமல்ஹாசனின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் பொறுப்பாளர் ஆர்.தங்கவேலு விடுத்த அறிக்கையில்:

நற்பணி இயக்க தலைவர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, அவருடைய 58-வது பிறந்த நாளான நவம்பர் 7-ந் தேதி சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 இடங்களில் நடைபெற இருக்கிறது.

இதையொட்டி ரத்த தானம், உடல் உறுப்புகள் தானம் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழாக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இம்மாதம் முழுவதும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் நடக்கிறது.

சென்னையில், குரோம்பேட்டை சைல்டு கேர் பவுன்டேஷன் குழந்தைகளுக்கு உணவு மற்றும் 58 மரக்கன்றுகள் நடுவதுடன், காலை 8 மணிக்கு விழா தொடங்குகிறது.

மாலை 5 மணி வரை 12 இடங்களில், பல்வேறு நலத்திட்ட பணிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில், அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் ஆர்.தங்கவேலு கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை ரமேஷ், ஜெயவேல், கமால், கிருபா, துரை, வட சென்னை மாறன், பாலா, காந்திபுரம் மணிவண்ணன், ஆவடி பாபு, ரூபலிங்கம் ஆகியோர் செய்து இருக்கிறார்கள்.

இதுபோல் தஞ்சை, காஞ்சிபுரம், வால்பாறை, கோவை, திருப்பூர், விருதுநகர், சிவகாசி ஆகிய இடங்களிலும் மதிய உணவு, வேட்டி-சேலை, குழந்தைகள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள், நோட்டு புத்தகங்கள், ஆம்புலன்ஸ் வசதி போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments