உலக நாயகன் கமலஹாசன் விஸ்வரூபம்’ படத்தின் பாடல்கள் வெளியீடு நிகழ்ச்சி திடீர் ரத்து!!!

Monday,5th of November 2012
சென்னை::உலக நாயகன் கமலஹாசன் கதை, இணை தயாரிப்பு, இயக்குனர் மற்றும் கதாநாயகனாகவும் நடிக்கும் ‘விஸ்வரூபம்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. சில காட்சிகள் சென்னை, மும்பையில் எடுக்கப்பட்டன. இந்திய திரையுலகில் முதல் முயற்சியாக ‘அவ்ரோ 3டி’ என்ற நவீன ஒலி தொழில்நுட்பத்தில் விஸ்வரூபம் திரையிடப்பட உள்ளது.

சங்கர் எசான்லாய் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை தமிழில் கவிஞர் வைரமுத்துவும், இந்தியில் ஜாவீத் அக்தரும் எழுதியுள்ளனர். ‘விஸ்வரூபம்’ பாடல் வெளியீட்டு விழா, கமலஹாசனின் 58-வது பிறந்த நாளான இம்மாதம் 7-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகரங்களில் ஒரே நாளில் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமலஹாசன் பங்கேற்பதாக திட்டமிட்டிருந்தனர். ஆடியோ வெளியீட்டைத் தொடர்ந்து, டிசம்பர் 14-ந் தேதி இப்படத்தை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், விஸ்வரூபம் படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக இன்று திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், விரைவில் வேறொரு நாளில் இந்நிகழ்ச்சி நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments